ஜல்லிக்கட்டு சிக்கலைத் தீர்க்கக் கோரி மாடு பிடி வீரர்கள் மதுரையில் தாரை தப்பட்டையுடன் பேரணி
மதுரை: ஜல்லிக்கட்டு நடத்துவதில் உள்ள சிக்கல்களை அரசு தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரி சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் தாரை தப்பட்டைகள் முழங்க காளைகளுடன் நூற்றுக்கணக்கான மாடு பிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மதுரையில் ஊர்வலம் நடத்தினர்.
தமிழர்களின் வீரவிளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டை நடத்துவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த விளையாட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று சில ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் சில விதிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால ஆணை பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே கடந்த ஆண்டு வனவிலங்குகள் சட்டத்தின்கீழ் ஜல்லிக்கட்டு காளைகளை சேர்த்தார் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள விதிகளுக்குட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை கலெக்டர் சகாயம் தலைமையில் கடந்த 29ம் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 77 விதிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த அறிவுறுத்தப்பட்டது.
விதிமுறைகளுக்குட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த விரும்புபவர்கள் ரூ.2 லட்சம் டெபாசிட் கட்ட வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகளை விலங்குகள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் உள்ளன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கான டெபாசிட்டை அரசு ரத்து செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு காளைகளை விலங்குகள் நலவாரியத்தில் பதிவு செய்ய அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஊர்வலம் நடத்தப்படும் என்று ஜல்லிக்கட்டு பேரவை அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று பகலில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ஆர்.ராஜசேகர் தலைமையில் நடந்த ஊர்வலத்தில் ஒரு டிராக்டரில் 3 ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வந்தனர்.
சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் காமராஜர் சாலை வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. பிறகு மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் இது தொடர்பான கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications