5 மாநில தேர்தல் பிரசாரத்திற்கு அன்னா வர மாட்டார்-கிரண் பேடி
டெல்லி: ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் அன்னா ஹஸாரே கலந்து கொள்ள மாட்டார் என்று அவரது குழுவைச் சேர்ந்த கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
அன்னாவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் கிட்டத்தட்ட தோல்வி அடைந்து விட்டது. மக்களின் ஆதரவு இல்லாததால் மும்பையில் தொடங்கிய 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை 2வது நாளிலேயே முடித்து விட்டார் அன்னா. தற்போது உடல் நல பாதிப்பால் அவர் புனேயில் ஓய்வெடுத்து வருகிறார்.
முன்னதாக உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்வோம் என்று அன்னா ஹஸாரே குழுவினர் கூறியிருந்தனர். இதில் அன்னா கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது. தற்போது அன்னா வர மாட்டார் என்று கிரண் பேடி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், புனேயில் உள்ள மருத்துவமனையில் அன்னா சிகிச்சை மற்றும் ஓய்வில் இருக்கிறார். அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
தற்போது அவருக்கு முழு ஓய்வு தேவை. பயணம் மேற்கொள்ளக் கூடாது என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். என்னைப் பொறுத்தவரை அன்னா ஓய்வெடுக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.எனவே அவர் பிரசாரத்திற்கு வர மாட்டார் என்றார்.
டிசம்பர் 31ம் தேதி புனேயில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அன்னா ஹஸாரே. அன்று முதல் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications