நில மோசடி வழக்கு: சென்னை கோர்ட்டில் உதயநிதி ஸ்டாலின் சரண்-ஜாமீனில் விடுதலை
சென்னை: சென்னை போலீஸார் பதிவு செய்துள்ள நிலமோசடி வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்றத்தில் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சரணடைந்தார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சேஷாத்திரி என்பவர் தன்னுடைய இடத்தை மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்பட சிலர் மிரட்டி வாங்கியதாக புகார் செய்திருந்தார். இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்ஜாமீன் பெற்று இருந்தார். இதையடுத்து சைதாப்பேட்டை பெருநகர 11-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் ராம் முன்பு புதன்கிழமை சரண் அடைந்தார்.
அப்போது உயர்நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீன் உத்தரவு சைதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு 2 நபர் ஜாமீன் வழங்கப்பட்டது. இதை ஏற்று மாஜிஸ்திரேட் ராம் ஜாமீன் வழங்கினார்.
இந்த முன்ஜாமீன் உத்தரவுப்படி உதயநிதி ஸ்டாலின் இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நில மோசடி குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி இன்ஸ்பெக்டர் காதர் பாஷா முன்னிலையில் கையெழுத்திட்டார்.












Click it and Unblock the Notifications