வைகுண்ட ஏகாதசி: திருமலையில் டிக்கெட் விற்பனையில் முறைகேடு-பக்தர்கள் அதிருப்தி
திருமலை: வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி திருமலையில் குவிந்த பக்தர்கள் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி அவதிக்குள்ளாகியுள்ளனர். 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகள், ரூ.5000, ரூ.10000 என முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாகவும் பக்தர்கள் புகார் கூறியுள்ளனர்.
இந்தியாவில் உள்ள வைணவதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம். ஏழுமலைகளின் மேல் அமர்ந்திருப்பதால் இந்தியா முழுவதிலும் இருந்து எண்ணற்ற பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர்.
விஐபி பக்தர்கள் கண்ணீர்
இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து பக்தர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விவிஐபி, விஐபி என இரு பிரிவாக பிரித்து அனுப்பப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு அதில் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் 500 ரூபாய் டிக்கெட்டுகள் ஒவ்வொன்றும் 5000 ரூபாய் மற்றும் 10000 ரூபாய்க்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் 10000 விஐபி பாஸ்கள் அனைத்தும் பக்தர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரைப்பட நடிகர் மோகன்பாபு, காங்கிரஸ் எம்.பி சாம்பசிவராவ், மற்றும் வெங்கடகிரி எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கபட்டதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மீது பக்தர்கள் புகார் கூறியுள்ளனர். முன்னதாக விஐபி பாஸ் அனுமதி கிடையாது என்று அறிவித்திருந்த ஆலய நிர்வாகம், திடீரென்று பாஸ் கொடுத்தது ஏன் என்றும் பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போக்குவரத்து நெருக்கடி
இதனிடையே வைகுண்ட ஏகாதசியன்று நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்ததால் 6 கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்த குழப்பத்தினால் அலிபிரியில் இருந்து நடைபயணமாக திருமலைக்கு வந்த பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியதாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications