திருப்பதி கோவிலில் பக்தர்கள் நெரிசல் - தரிசனத்திற்கு தாமதம் - இரும்பு கதவுகள் உடைப்பு
திருமலை: திருமலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தாமதமானாதால், ஆத்திரமடைந்த வரிசையில் நின்ற பக்தர்கள் இரும்பு தடுப்புகளை அடித்து உடைத்தனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலையி்ல் குவிந்து இருந்தனர். நேற்றுமுன்தினம் இரவு இலவச தரிசனம் செய்ய செல்லும் 2வது வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் வழியாக சென்ற பக்தர்கள் 16, 18, 19 உள்ளிட்ட 3 வரிசைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். ஆனால் பல மணிநேரம் கடந்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர்.
ஆனால் இதனை கோவில் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் வரிசை தடுப்பு கம்பிகளையும், இரும்பு கதவுகளையும் அடித்து உடைத்தனர்.
பின்பு நடைபாதை வழியாக பக்தர்கள் தரிசனத்திற்காக வேகமாக ஓடினர். அதற்குள் கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்களும், அதிகாரிகளும் பக்தர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையடுத்து சமாதானம் அடைந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரிசையில் வர சம்மதித்தனர்.
சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ஆத்திரமடைந்து கோவில் இரும்பு தடுப்புகளை அடித்து உடைத்ததால், சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications