ரூ. 5000 நிவாரணம் தேவை : நெல்லிக்குப்பம் மக்கள் சாலைமறியல்
கடலூர் : அரசு அறிவித்த புயல் நிவாரணத் தொகையான 5 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வலியுறுத்தி கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தானே புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம். அங்குள்ள வீடுகள் காற்றோடு அடித்துச்செல்லப்பட்டுள்ளன. எனவே வீடுகளை புதுப்பிக்க 5000 ரூபாய் நிவாரணத் தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் முழு நிவாரணத் தொகையை வழங்காமல் 2000 ரூபாய் மட்டுமே தருவதாக நெல்லிக்குப்பம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அங்கு மூன்று வார்டுகளில் முறையாக நிவாரணத் தொகை வழங்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சாலைமறியல்
இந்த நிலையில் முழு நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கடலூர் – பண்ருட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர் இருப்பினும், . மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து உடனடியாக நிவாரணத் தொகையை வழங்கும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள தங்களுக்கு முழு நிவாரணத்தொகை வழங்கினால் மட்டுமே தங்களின் வீடுகளை புதுப்பிக்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் நிவாரணத் தொகை முழுவதும் ஓரிரு தினங்களில் வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் யாரும் போராட்டங்களில் ஈடுபடவேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அமுதவல்லி கேட்டுக்கொண்டுள்ளார். பொதுமக்கள் போராட்டத்தால், கடலூர் – பண்ருட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணிக்கணக்கில் வாகனங்கள் காத்திருந்தன.












Click it and Unblock the Notifications