நான் பலவீனமாகி விட்டேன்-மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன அன்னா பேச்சு!
புனே: உடல் நல பாதிப்பால் புனே மருத்துவமனையில் கடந்தஒரு வாரமாக சிகிச்சையும், ஓய்வும் எடுத்து வந்த அன்னா ஹஸாரே இன்று அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். நான் நலமாக இருக்கிறேன், ஆனால் பலவீனமாக உணர்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
டிசம்பர் 31ம் தேதி இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அன்னா. அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஜன் லோக்பால் மசோதாவை தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார் அன்னா. ஆனால் மத்திய அரசு அவரை புறம் தள்ளி விட்டு தனது லோக்பால் மசோதாவை சமீபத்தில் லோக்சபாவில் கஷ்டப்பட்டு நிறைவேற்றி விட்டது. இதனால் அன்னா குழு அதிர்ச்சி அடைந்தது. மேலும், அந்தக் குழுவின் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவும் குறைந்தது. இதையடுத்து மும்பையில் தொடங்கிய 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை 2வது நாளிலேயே முடித்துக் கொண்டார் அன்னா. அதன் பிறகுதான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்த அன்னா ஹஸாரே கூறுகையில், நான் நலமாக இருக்கிறேன். ஆனால் பலவீனமாக உணர்கிறேன். டாக்டர்கள் ஒரு மாதம் ரெஸ்ட் எடுக்கக் கூறியுள்ளனர். அதன்படி ஓய்வெடுக்கவுள்ளேன் என்றார் அன்னா.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் அன்னா ஹஸாரே நேராக தனது சொந்த ஊரான ராலேகான் சித்திக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அடுத்து என்ன செய்வது என்றுதெரியவில்லை, புரியவில்லை என்று அன்னா குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால் ஏற்கனவே கூறியுள்ளார். இந்த நிலையில் அடுத்து அன்னா என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் எது செய்தாலும் ஒரு மாத ஓய்வுக்குப் பின்னரே அன்னா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications