ஆற்றுக்கால் கோவிலில் தமிழக ஐயப்ப பக்தர்களின் பேருந்து மீது தாக்குதல்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் தமிழக ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து மீது மலையாளிகள் நடத்திய தாக்குதலில் பேருந்து கண்ணாடிகள் சேதமடைந்தன. மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
ராசிபுரம் பக்தர்கள்
ஜனவரி 5-ந் தேதி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து 56 பேர் அடங்கிய அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு புறப்பட்டனர். இவர்கள் 7-ந் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் முடித்துவிட்டு திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசாமி கோவிலுக்கு ஞாயிறுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வந்தனர். முன்னதாக அவர்கள் வந்த பேருந்தை ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் அருகே உள்ள வாகன நிறுத்தம் பகுதியில் நிறுத்திவிட்டு, பத்மநாப சாமி கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது பஸ்சின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் தேடுதல்
மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பேருந்தின் கண்ணாடிகளை கற்களை வீசி உடைத்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கல் வீசிவிட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
தொடர்ந்து பஸ்சின் உடைந்த கண்ணாடிகளை மாற்றித் தருவதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் சமாதானம் அடைந்தனர். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்
இந்த தாக்குதலை கண்டித்து புரட்சிகர தொழிலாளர் கட்சி, இந்திய தொழிலாளர் பேரவை சார்பில் ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் தமிழக பக்தர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளைக காக்கப்பட வேண்டும் என்று முழங்கங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications