ஈரோடு அருகே காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி
ஈரோடு: ஈரோடு அருகே காவிரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் ஒரு சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்களைத் தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் சார்லஸ் (45). அவர் திருப்பூரில் உள்ள கோத்ரேஜ் பீரோ தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவருடைய மனைவி தெபராள் (40). ஈரோடு கலைமகள் பள்ளி ஆசிரியை. அவர்களுடைய மகள்கள் நிக்கி (21), டோனா (19). அதில் நிக்கி பெருந்துறை மகாராஜா கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வந்தார். டோனா ஈரோட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார்.
சார்லசின் உறவினர் டேவிட் பாசோ (48). அவருடைய மனைவி கிளாடியோ பாசோ (38). அவர்களுடைய மகள் ஹேண்டிஸ் பாசோ (8), மகன் ரையன் பாசோ (2). சவூதி அரேபியாவில் என்ஜினியராக பணிபுரிந்த டேவிட் தனது குடும்பத்தோடு அங்கு வசித்து வந்தார். அவரது தந்தை ஆர்.டி.பாசோ சாஸ்திரி நகரில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வந்ததால் அங்கு வந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட டேவிட் தனது குடும்பத்துடன் கடந்த மாதம் 19ம் தேதி சவூதியில் இருந்து ஈரோட்டுக்கு வந்தார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 11 மணிக்கு சார்லஸ் மற்றும் டேவிட் குடும்பத்தினர் ஈரோடு அருகே உள்ள வெண்டிப்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவனை நீர் மின் நிலைய்ததை பார்க்க புறப்பட்டனர்.
கதவணையை பார்த்த பிறகு தாங்கள் கொண்டு வந்த உணவை ஆற்றங்கரையோரத்தில் அமர்ந்து சாப்பிட்டனர். அவர்கள் சாப்பிடுகையில் காவிரியில் தண்ணீர் ஓட்டம் குறைவாக இருந்தது. இதையடுத்து அவர்கள் சாப்பிட்டுவிட்டு ஆற்றி்ல் குளிக்கச் சென்றனர். ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டுக்கு நடந்து சென்றனர்.
மணல் திட்டை அடைந்ததும் சார்லசின் மனைவி தெபராள் மட்டும் குளிக்கவில்லை. மற்றவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்தனர். தடுப்பணையில் அதிகமாக தண்ணீர் தேங்கினால் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படும். அதேபோல் நேற்று பகல் 1 மணிக்கு எந்தவித முன் அறிவிப்பும் இன்று கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதற்கிடையே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் வெள்ளம் வருவதை கவனிக்கவில்லை. அப்போது கரையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் ஆற்றில் வெள்ளம் வருவதை பார்ததுவிட்டு அங்கு குளித்தவர்களை கரையேறுமாறு கத்தினர்.
மீனவர்களின் சத்தம் கேட்டு அவர்கள் உஷாராகி கரையேறும் முன்பு ஆற்று வெள்ளத்தில் சிக்கினர். தங்களைக் காப்பாற்றுமாறு அவர்கள் அலறினர். மணல் திட்டில் நின்று கொண்டிருந்த தெபராள் தனது குடும்பத்தாரைக் காப்பாற்றுமாறு மீனவர்களை அழைத்தார்.
இதையடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மீனவர்கள் விரைந்து சென்றனர். ஆனால் அவர்களால் தெபராள் மற்றும் டேவிட்டின் மகன் ரையன் பாசோவை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மற்றவர்களை வெள்ளம் இழுத்துச் சென்றது.
உடனே அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். அதில் டேவிட்டின் மகள் ஹேண்டிஸின் உடலை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. இந்த தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து சென்று அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.
தன் கண் முன்னே தனது குடும்பம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதைப் பார்த்த தெபராள் அதிர்ச்சியில் மயங்கினார். அதற்குள் இந்த தகவல் கிடைத்து சார்லஸ் மற்றும் தெபராள் ஆகியோரின் உறவினர்கள் அங்கு வந்தனர். அவர்கள் தெபராளை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
சார்லஸ், அவருடைய மகள்கள் நிக்கி, டோனா, டேவிட் பாசோ, அவரது மனைவி கிளாடியோ பாசோ, உறவினர் கிளட்ஸ்டின் பெயின் ஆகிய 6 பேரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியாகியுள்ளனர். அவர்களின் உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் ஈரோடு கலெக்டர் சண்முகம், நாமக்கல் கலெக்டர் குமரகுருபரன், ஆர்.டி.ஓ.க்கள் சுகுமார்(ஈரோடு), கவிதா (நாமக்கல்), ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கதவணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதை உடனே நிறுத்துமாறு இரு மாவட்ட கலெக்டர்களும் உத்தரவிட்டனர்.
அதன்படி அணையில் இருந்து தண்ணீர் திறநந்துவிடுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் கதவணையில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications