திமுக டிசைன் அப்படி.. சிபிஎம் ஆட்சி அமைக்க நினைத்தாலும் தடுப்பாங்க.. சிபிஎம் கடும் குற்றச்சாட்டு!
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. அதிமுக கட்சி நாளுக்கு நாள் பின்னடைவை சந்தித்து வருகிறது. திமுக கூட்டணி உடைந்துள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகள் மீது விமர்சனங்களை வைத்து வருகிறது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏன் நடந்தது, தேர்தல் முடிவுக்கு பிறகு திமுகவின் செயல்கள் எப்படி இருந்தன என்பது குறித்து சிபிஎம் கட்சி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிபிஎம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுகவைச் சார்ந்தவர்களும், திமுக ஆதரவு அறிவுஜீவிகளும் கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது தொடுத்து வருகின்றனர்.

அதிமுக பாஜக தோல்வி
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்த நிலையில் அவர்களுக்கு ஆதரவளிப்பது, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிப்பது, எவரும் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்கவில்லை என்றால் குடியரசு தலைவர் ஆட்சி அமையும். இல்லையென்றால் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்வது ஆகிய வாய்ப்புகள் தான் இருந்தன.
மேற்கண்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு விவாதித்தது.
அதிமுக ஆட்சி அமைப்பது - திமுக ஆதரிப்பது என்கிற யோசனை முன் வைக்கப்பட்டது. அதற்கு இடதுசாரிக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும். இந்தத் தேர்தலின் மையமான அம்சமே பாஜக - அதிமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். மக்களும் தோற்கடித்திருக்கிறார்கள். அதிலும் பாஜக ஒரு தொகுதியில் ஆயிரம் வாக்குக்கும் குறைவாகப் பெற்று வாக்கு சதவிகிதமும் பெருமளவு குறைந்து படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
அதிமுக திமுக கூட்டு
அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியடைந்துள்ளது. தோல்வியடைந்த ஒரு கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவது என்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதமில்லாமல் வேறு என்ன? எனவே, அதிமுக - திமுக அணியின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என்ற யோசனையை மார்க்சிஸ்ட் கட்சி நிராகரித்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடர வேண்டும் என்ற முறையில் அந்த யோசனை முன்வைக்கப்பட்டது. இவர்கள்தான், அதிமுகவை திராவிட கட்சி என்ற அளவுகோலில் வைக்க முடியாது என்று பல நேரங்களில் கூறியிருக்கிறார்கள் என்பதை நினைவூட்டுகிறோம்.
மேற்கண்ட கருத்தின் நோக்கமென்ன? திராவிடக் கட்சிகளைத் தவிர வேறு யாரும் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த விடக்கூடாது என்பதைத் தவிர இதில் தமிழ்நாட்டின் நலன் வேறு என்ன இருக்கிறது?
இடதுசாரிக் கட்சிகள் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டாலும் திமுக - அதிமுக இதே நிலைபாட்டை மேற்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்ததன் மூலம், குடியரசு தலைவர் ஆட்சி அமைவதைத் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். திமுக ஆதரவுடன் அதிமுக கூட்டணி ஆட்சி என்ற தவறு நிகழாமல் தடுத்திருக்கிறோம்.
பாதிப்புகள் என்ன
இன்றைய இளைய தலைமுறையினர் தங்களின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து புதிய மாற்று சக்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பி வாக்களித்துள்ளனர். இங்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் இடதுசாரி - வலதுசாரி இரண்டு தரப்புக்கும் வெற்றி கிடைத்து ஆட்சியில் அமர்ந்துள்ளனர். நேபாளம், இலங்கை போன்ற அண்டை நாடுகளிலேயே இளை ஞர்களின் பேராவேசத்தைக் கண்டோம். எனவே, இங்கு மட்டும் மாற்றமே கூடாது என்பது சரியா.
சமூக வலைதளத்தை சரியாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி தவெகவினர் வெற்றி பெற்று விட்டனர், இது ரீல்ஸ் ஆட்சிதானே தவிர ரியல் ஆட்சி அல்ல என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆம், திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியைச் சரியாகப் பயன்படுத்தினர். சமூக வலைதளம் மூலம் மக்களின் முன் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் என்ன? ஒன்றிய பாஜக அரசும், மாநில திமுக ஆட்சியும் கடைபிடித்த நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அவர்கள் உணர்ந்தனர்.
திமுகவினர் உணர வேண்டும்
லஞ்சம், ஊழல், சொத்துக் குவிப்பு, கனிம வளக் கொள்ளை, பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள்; திமுக கொடுத்த சில தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததும், பல வாக்குறுதிகள் காலம் கடந்து நிறைவேற்றப்பட்டதும் உள்ளிட்ட பிரச்சனைகளைத்தான் சமூக வலைதளங்களின் மூலம் மக்களிடம் முன்வைத்தனர். நலத்திட்டங்கள் மட்டுமே மக்களைத் திருப்திப்படுத்தவில்லை என்பதை திமுகவினர் உணர வேண்டும்.
ஆதரவு கேட்டு தவெக அளித்த கடிதத்தில் "மதச்சார்பின்மைக் கொள்கையில் எப்போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். அனைவருக்குமான ஆட்சியாக எங்கள் ஆட்சி இருக்கும். நேர்மையான ஆட்சியைத் தருவோம்" என்று கூறியிருந்தனர். நேரில் சந்தித்தபோதும் இதை உறுதிப்படுத்தினர். மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவளித்தது. வெளியிலிருந்து ஆதரவு, கூட்டணி ஆட்சி போன்ற அனுபவங்களெல்லாம் வேறு எந்தக் கட்சியையும் விட செழுமைமிக்க அனுபவம் அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications