மேகதாது தீர்மானம்.. சட்டமன்றத்தில் தவெக விதிமீறல்.. பாயின்டை பிடித்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு அந்த மாநில அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு எதிராக தமிழக சட்டன்றத்தில் இன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குறிப்பிட்ட திருத்தங்களையும் இணைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை திமுக ஆதரித்துள்ளது. அதேநேரத்தில் தீர்மானம் விவகாரத்தில் சட்டமன்ற விதிகள் மீறப்பட்டிருப்பதாகவும், இத்தீர்மானம் யாரை மகிழ்விக்க நிறைவேற்றப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரல் நாள் 19.6.2026-ன், வ.எண் 5ல், தெரிவிக்கப்பட்ட அரசினர் தனி தீர்மானம் மூலம் கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நான் ஆதரித்து பேசினேன்.

தீர்மானம் ஆதரவு விளக்கம்
எனக்கு அடுத்து உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் தன்னுடைய உரையில் ஏற்கனவே திருத்தம் ஒன்று அளித்திருப்பதாகவும், அது பற்றிய கருத்தை தெரிவித்தார்கள். உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து, 'நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான ஒரு பத்தியை' இணைக்கலாம் என தெரிவித்தார்கள். பொதுவாக தீர்மானத்திற்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு, பேரவையில் பின்னர்தான் சேர்க்கப்பட வேண்டும்.
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவர் கொண்டுவந்த திருத்தத்துடன் கூடிய தீர்மானத்தை முன்மொழியப்படாமல், வழிமொழியப்படாமல், விவாதிக்கப்படாமல், வாக்கெடுப்பிற்கும் விடப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது சட்டமன்ற விதிகளுக்கு முற்றிலும் முரணானது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 19.6.2026 சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்தோம்.
இது செல்லாது
தவிர, முதலமைச்சர் கடைசியாக மொழிந்த இடைச் செருகல் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.திருத்திய தீர்மானம் அரசினர் தனித் தீர்மானம் ஆகாது. இத்தீர்மானம் யாரை மகிழ்விக்க ? யாரை வஞ்சிக்க" என்று கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடியின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications