கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் வர ஒருமாதமாகும்: ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் அழைப்பு
கடலூர்: தானே புயலால் மின் விநியோகம் பாதித்துள்ள மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றாலும் இயல்பு நிலை திரும்ப ஒருமாதமாகும் என்று மின்வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே சீரமைப்பு பணிக்கு கூடுதலாக 3,000 பேரை திரட்டும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.
முதற்கட்டமாக கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற மின் ஊழியர்கள் 800 பேரை, மின்சார சீரமைப்பு பணிக்கு மின் வாரியம் அழைத்துள்ளது.
தானே புயல் ஆடிய கோர தாண்டவத்தால் கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டத்தில், மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பத்து நாட்களாக சீரமைப்பு பணிகள் நடைபெற்றாலும் கடலூர் தவிர, நடுவீரப்பட்டு சாலையிலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் சிதம்பரம், பரங்கிப்பேட்டை சாலையிலுள்ள 100க்கும் மேற்பட்ட பேரூர், கிராம பகுதிகளுக்கும், இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை.
ஓய்வு பெற்றவர்களுக்கு அழைப்பு
இந்தப் பகுதிகளுக்கு முழுமையான மின்சாரம் வினியோகம் செய்ய குறைந்தது ஒரு மாதகாலமாகும் என, மின்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் அவர், கூறியதாவது, பொங்கலுக்குள் பெரும்பாலான பகுதிகளுக்கு மின் வினியோகம் தர நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதற்கு தற்போதைய ஆட்களை விட அதிகமாக மின்துறை ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். மற்ற மாவட்டங்களில் உள்ள அனைவரையும் அழைத்து வந்தால், அங்குள்ள பணிகள் பாதிக்கப்படும்.
அதனால், ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை, ஓய்வு பெற்ற மின் ஊழியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற மின் ஊழியர்கள், 800 பேரை புயல் சீரமைப்பு பணிக்கு வர அழைப்பு விடுத்துள்ளோம்.
இதேபோல், தனியார் மின் நிலையங்கள், மின் கருவிகளுக்கான நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களையும், அவசர பணிக்கு அழைத்துள்ளோம். மொத்தத்தில், இன்னும் 3,000 ஊழியர்களை கூடுதல் பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications