திமுக துணைத் தலைவராகிறார் கனிமொழி?

2ஜி வழக்கில் கைதாகி 7 மாதம் சிறையில் இருந்த கனிமொழி, கடந்த மாதம் ஜாமீனில் விடுதலையானார். இதையடுத்து பெரும்பாலும் டெல்லியிலேயே இருக்கும் கனிமொழி வழக்கு விசாரணைகளில் ஆஜராகி வருகிறார்.
கலைஞர் டிவி விவகாரத்தில் எந்தத் தவறும் செய்யாத கனிமொழி, கட்சிக்காகவே சிறைக்குச் செல்ல நேர்ந்ததாகவும், இதனால் அவருக்கு முக்கிய பதவி தரப்பட வேண்டும் என்றும் அவரது தயார் ராஜாத்தி அம்மாள் வலியுறுத்தி வருகிறார்.
அரசியலையே கூட விரும்பி ஏற்காத கனிமொழி, கட்சிக்காக செய்த தியாகங்கள் மிக அதிகம் என்று கூறி வரும் ராசாத்தி அம்மாள், அவருக்கு எதிர்காலத்தில் கட்சியில் போதிய அங்கீகாரம் தரப்பட வேண்டும் என்கிறார்.
ஆனால், இதை ஸ்டாலின் விரும்பவில்லை என்று தெரிகிறது. இருப்பினும் ஸ்டாலினின் எதிர்ப்பையும் மீறி கனிமொழிக்கு முக்கிய பதவி வழங்க திமுக தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வரும் பிப்ரவரி 3ம் தேதி கூடும் திமுக பொதுக் குழுவில், கனிமொழிக்கு துணைத் தலைவர் பதவியும், ஸ்டாலினுக்கு பதவி உயர்வாக துணைப் பொதுச் செயலாளர் பதவியும் தரப்படலாம் என்கிறார்கள்.
தான் அரசியலில் தீவிரமாக இருக்கும்போதே, கனிமொழிக்கு கட்சியில் முக்கிய இடத்தைத் தந்துவிட கருணாநிதி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
முதலில் கருணாநிதியின் இலக்கிய வாரிசாக மட்டுமே கருதப்பட்ட கனிமொழி, எப்போது ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டு டெல்லியில் தயாநிதி மாறனுக்கு மாற்றான ஒரு சக்தியாக உருவாக்கப்பட்டாரோ, அப்போதே அவரும் அழகிரியைப் போல ஸ்டாலினுக்கும் ஒரு போட்டியாக உருவாகிவிட்டார்.
சமீபத்தில் வட சென்னையில் கனிமொழியின் 45வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். இந்த விழாவைத் தடுக்க ஸ்டாலின் தரப்பு முயன்றதாகவும் கூட செய்திகள் வெளியாயின. ஆனால் அதையும் மீறி திமுகவினர் பெருமளவில் பங்கேற்க, அந்த விழாவை நடத்திக் காட்டினர் கனிமொழி ஆதரவாளர்கள்.
ராஜ்யசபா எம்பியாக கனிமொழியின் செயல்பாடுகள் அவ்வளவாக வெளிச்சத்துக்கு வரவில்லை என்பதே நிஜம். நாடாளுமன்றத்தின் பெண்கள், நலம், ஊரக வளர்ச்சி தொடர்பான குழுக்களில் மிக ஆர்வமாக பங்கேற்றுள்ள கனிமொழி, அதில் சும்மா ஒப்புக்கு இடம் பெறாமல் தீவிர ஆர்வம் காட்டி வருவதோடு, நல்ல யோசனைகளையும் வழங்கி வருகிறார்.
குறிப்பாக மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர், திருநங்கைகள், சமூக நீதி போன்ற விவகாரங்களில் கனிமொழியின் யோசனைகளை மற்ற எம்பிக்கள் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.
திமுகவைப் பொறுத்தவரை ஸ்டாலின் கடைமட்டத்தில் இருந்து படிப்படியாக உழைத்து, கட்சிக்காக பல தியாகங்கள் செய்து மேலே வந்தவர். ஆனால், அழகிரி திடீரென வானத்தில் இருந்து குதித்தது போலத்தான், கட்சிக்குள் திடீர் தலைவராக நுழைந்தார்.
அதே சமயம் கனிமொழியைப் பொறுத்தவரை அவர் அரசியலைவிட இலக்கியத்தையே விரும்பினாலும், அவரைச் சுற்றி இருந்தவர்கள் அவரை அரசியலுக்குள் தள்ளிவிட்டனர். இப்போது அவருக்கு தியாகி என்ற பட்டம் சூட்டி, அவரை அரசியலில் அடுத்த கட்டத்துக்கு வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் தான் அவருக்கு திமுகவில் முக்கியப் பதவியைப் பெற்றுத் தர தீவிரம் காட்டி வருகின்றனர். இதை கருணாநிதியும் ஆதரிப்பதாகத் தெரிகிறது.
ஸ்டாலின் விரும்பாவிட்டாலும், ஏன் கனிமொழியே விரும்பாவிட்டாலும் கூட, இதைத் தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications