தேர்தல் பார்வையாளர்களாக உ.பி. செல்லும் 6 தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள்
சென்னை: தேர்தல் பார்வையாளர்களாக தமிழகத்தைச் சேர்ந்த 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உத்தர பிரதேசம் செல்கின்றனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 4ம் தேதி முதல் 28ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அம்மாநில முதல்வர் மாயாவதியை தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முனைப்பாக உள்ளன.
வெற்றிக் கனியைப் பறிக்க அனைத்து கட்சிகளும் குறியாக உள்ளன. இதற்கிடையே தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் மிகுந்த சிரத்தை எடுத்து செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தேர்தல் பார்வையாளர்களாக தமிழகத்தில் இருந்து ஐ.ஜி.க்கள் எம்.ரவி, சங்கர் ஜிவால், சைலேஷ் குமார் யாதவ், பாலசுப்பிரமணியன், ஆறுமுகம், டி.ஐ.ஜி.வெங்கட்ராமன் உள்ளிட்ட 6 போலீஸ் அதிகாரிகள் உத்தர பிரதேசம் செல்லவிருக்கின்றனர்.
இவர்களில் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும் வெங்கட்ராமனை அனுப்புவது சுலபமல்ல என்று காவல்துறை இயக்குனர், தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் திருமணம் மார்ச் மாதம் நடக்க இருப்பதால், தேர்தல் பணியில் இருந்து தன்னையும் விடுவிக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்துக் கழக (தர்மபுரி) விஜிலென்ஸ் அதிகாரியும், ஐ.ஜியுமான பாலசுப்பிரமணியம் தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெங்கட்ராமன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 2 பேருக்கு பதிலாக ஐ.ஜி.க்கள் ஏ.கே.விஸ்வநாதன், வன்னிய பெருமாள் ஆகியோரை அனுப்ப காவல்துறை தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications