தானே புயலில் சிக்கி சிதிலமான விவசாயப் பண்ணை- சோகத்தில் மாணவர் தற்கொலை
கடலூர்: தானே புயலில் சிக்கி தனது விவசாயப் பண்ணை பெரும் சேதமடைந்ததால் அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை நினைத்து மன வேதனை அடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் விஷம் குடித்து உயிரை நீத்த பரிதாபச் சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கவுதமன். 19 வயதான இவர் உத்திரமேரூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் அறிவியல் படிப்பை படித்து வந்தார்.
ரவிச்சந்திரனுக்குச் சொந்தமாக அவரது ஊரில் பண்ணை உள்ளது. அங்குள்ள தென்னை மரங்கள் அனைத்தும் தானே புயலில் சிக்கி வீழ்ந்து விட்டன. இதனால் ரவிச்சந்திரன் குடும்பத்தார் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த கவுதமன் பண்ணையைப் பார்த்து பெரும் அதிர்ச்சியுற்றார், மன உளைச்சலுக்குள்ளானார்.
அந்த வேதனையுடன் கல்லூரிக்கு வந்த அவர் விஷம் குடித்து விட்டார். மயங்கி விழுந்த அவரை சக மாணவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட கவுதமன் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கவுதமனின் சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications