பொங்கல் திருநாள்: 3.5 கோடி பேருக்கு இலவச வேட்டி சேலை திட்டத்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா!

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எம்ஜிஆர் தொடங்கிய திட்டம்
விவசாயத்தை அடுத்து கிராம மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக செய்யும் தொழில்களில் நெசவுத் தொழில் முதன்மைப் பெற்று விளங்குகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளிக்கவும், தேக்கமடைந்துள்ள துணிகளை விற்பனை செய்யவும், அதன்மூலம் அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாக்குவதற்காகவும், 1981-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி-சேலை வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கும் ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது.
விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் மூலம் தரமான வேட்டி சேலைகளை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முதன் முறையாக 2003-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா, பருத்தி நூலுடன் பாலியெஸ்டர் நூல் கலந்து வேட்டிகள் மற்றும் சேலைகள் உற்பத்தி செய்து வழங்க ஆணையிட்டார். அதன்படி, தொடர்ந்து வேட்டி வேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
2005-ம் ஆண்டு மாநிலத்திலுள்ள அனைத்து ஏழை எளிய மக்கள் இந்த பயனைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் மேலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
ரூ 350 கோடி
இந்த ஆண்டு (2012) பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 1 கோடியே 70 லட்சத்து 84 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 69 லட்சத்து 75 ஆயிரம் வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கென முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், பொங்கல் திருநாளையொட்டி இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 7 பயனாளிகளுக்கு வேட்டி சேலைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, வருவாய் துறை அமைச்சர் பி.தங்கமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜ், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, வருவாய் துறை முதன்மைச் செயலாளர் ஆர்.ராஜகோபால், வருவாய் நிர்வாக ஆணையர் ஞானதேசிகன், கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்த்துறைச் செயலாளர் சி.முத்துக்குமாரசாமி, அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications