ரயிலில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்: மாணவர் படுகாயம்
சேலம்: சேலத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் ரயிலில் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள முளம்துருத்தி பகுதியை சேர்ந்தவர்கள் ஈவாவர்கீஸ், அருண். இவர்கள் 2 பேரும் சேலத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தனர்.
பொங்கல் விடுமுறைக்காக கேரளாவுக்கு செல்லும் ரயில் புறப்பட்டனர். அவர்களுடன் அதே கல்லூரியில் படிக்கும் சில இறுதியாண்டு மாணவர்களும் பயணித்தனர். அப்போது இறுதியாண்டு மாணவர்கள், ஈவா வர்கீஸை கிண்டல் செய்துள்ளனர். மேலும் ஈவா வர்கீஸ் உடன் படிக்கும் மாணவிகளின் செல்போன் எண்களை தருமாறும் கேட்டுள்ளனர்.
இதனால் ஈவா வர்கீசுக்கும், இறுதியாண்டு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இறுதியாண்டு மாணவர்கள், ஈவா வர்கீஸை தாக்கினர். அதனை தடுக்க முயன்ற அருணும் தாக்குதலுக்கு உள்ளானார்.
ஓடும் ரயில் கல்லூரி மாணவர்கள் இடையே நடந்த மோதல் சம்பவம் மற்ற பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் இறுதியாண்டு மாணவர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த ஈவா வர்கீஸ், கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து 5 மாணவர்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.