பாக். உச்ச நீதிமன்றத்தில் கிலானி ஆஜர்: அவமதிப்பை ஒத்துக் கொண்டதால் கைதிலிருந்து தப்பினார்
இஸ்லாமாபாத்: நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அவமதிப்பு செய்தது உண்மைதான் என்று அவர் ஒத்துக் கொண்டதால் கைது நடவடிக்கையிலிருந்து தப்பினார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உள்பட பல தலைவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை அந்நாட்டு அரசு விசாரணைக்கு எடுக்காமல் வழக்கை முடித்துவிட்டது. அந்த வழக்குகளை எல்லாம் மறுபடியும் விசாரணைக்கு எடுக்குமாறு உச்ச நீதி்மன்றம் அரசுக்கு உத்தரவிட்டு கடந்த 16ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 16ம் தேதி பிரதமர் கிலானிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் கொடுத்ததுடன் அவரை ஜனவரி 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து கிலானி இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் கூறியதாவது,
நான் உச்ச நீதிமன்றத்தை பெரிதும் மதிக்கிறேன். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தவறுதான். அனைத்து நாட்டு அதிபர்களுக்கும் அரசியல் சாசன பாதுகாப்பு உண்டு. அதற்கு சர்தாரி ஒன்றும் விதிவிலக்கல்ல. அதனால் தான் சுவிட்சர்லாந்து வங்கிகளில் சர்தாரி வைத்திருப்பதாகக் கூறப்படும் பணம் குறித்து அந்நாட்டு அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவில்லை என்றார்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த விசாரணையின்போது கிலானி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தவறுதான் என்று கிலானி ஒத்துக் கொண்டதால் அவர் கைது நடவடிக்கையிலிருந்து தப்பியுள்ளார். ஒப்புக் கொள்ளாமல் போயிருந்தால் கைது செய்யப்பட நேரிட்டிருக்கும். அப்படி நேர்ந்திருந்தால் பிரதமர் பதவியிலிருந்தும் அவர் விலக நேரிட்டிருக்கும். ஆனால் அதிலிருந்து தற்போதைக்குத் தப்பி விட்டார்.
கிலானி வருகையையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. உச்ச நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள சாலை நேற்றிரவே மூடப்பட்டது. கிலானிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர், உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், அவாமி தேசிய கட்சியைச் சேர்ந்த அஸ்பந்த்யார் வாலி கான் மற்றும் பஞ்சாப் ஆளுநர் லதீப் கோசா ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications