கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்புடைய இருவர் சென்னையில் கைது
சென்னை: புதுச்சேரியில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட கும்பலுடன் தொடர்புடைய மேலும் இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில், 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றதாக, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
அவரது சிம் கார்டு குறித்து விசாரித்ததில், சென்னை சிட்லப்பாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த இஸ்ரா உல் ஷேக் என்பவரின் முகவரி அளிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்நிலையில், இஸ்ரா உல் ஷேக் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து பொருள் வாங்க முயன்றபோது, சந்தேகமடைந்த கடைக்காரர் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து இஸ்ரா உல் ஷேக்கை சிட்லப்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். இதுபோல், சைதாப்பேட்டை கடை ஒன்றி்ல் ராகுல் என்கிற முகம்மது கொடுத்த கள்ளநோட்டு குறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை சைதாப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இருவருக்கும் புதுச்சேரி கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
தொழிலாளர்களாக ஊடுருவல்
கடந்த 10 நாட்களுக்கு முன்னர், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த 3 கட்டுமானத் தொழிலாளர்களை தேசிய புலனாய்வு போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் கைது செய்யப்பட்ட இஸ்மாயிலையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த கள்ளநோட்டுகள் அனைத்தும் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு பங்களாதேஷ் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளது. இதனையடுத்து சென்னையில் தொழிலாளர்கள் போர்வையில் ஊடுருவியுள்ள வடமாநிலத்தவரை கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications