2ஜி ஊழல்: ப.சிதம்பரத்துக்கு எதிராக என்னிடம் எல்லா ஆதாரங்களும் உள்ளன-சு.சாமி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்ற காலத்தில் நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தையும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி, சாமி வழக்குத் தொடர்ந்துள்ளார். சாமி தாக்கல் செய்த மனுவில், சிதம்பரத்தின் ஒப்புதலுடனேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விலை நிர்ணயம் உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டன என்றும், இதுதொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவை, சிதம்ரபரம் பலமுறை சந்தித்துப் பேசியுள்ளார் என்றும் தனது மனுவில் கூறியுள்ளார்.
மேலும் ஐ.எஸ்.ஐ. உள்ளிட்ட உளவு அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் எச்சரிக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு சிதம்பரம் குந்தகம் ஏற்படுத்தியுள்ளார் என்றும் சாமி தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மீதான தீர்ப்பை டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 2ஜி ஊழல் தொடர்பாக ப.சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பப்படுமா?, அவரிடமும் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிடுமா என்பது அன்று தெரியவரும்.
இந் நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் பாஜக ஆதரவு கொண்ட அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் கூட்டத்தில் (ABVP) பேசிய சாமி, ப.சிதம்பரத்துக்கு எதிராக என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகமும், கேரளமும் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. எனவே இந்த முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுவதற்கு கருணாநிதிக்கு தார்மீக உரிமை இல்லை என்றார் சாமி.












Click it and Unblock the Notifications