தனது கட்சியை ஆயிரம் கோடிக்கு விற்று விட்டார் சிரஞ்சீவி-என்டிஆர் பாலகிருஷ்ணா!
ஹைதராபாத்: நடிகரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவி தனது கட்சியை ரூ.1000 கோடிக்கு காங்கிரஸிடம் விற்றுவிட்டார் என்று நடிகர் பாலகிருஷ்ணா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்.
இந்நிலையில் நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது,
நடிகர் சிரஞ்சீவி தன்னை என்.டி.ஆர். என்று நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். எனது தந்தை மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தார். அவருடன் சிரஞ்சீவியை ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது.
ஆந்திர மக்களின் நல்வாழ்வுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் எனது தந்தை. ஆனால் சிரஞ்சீவியோ தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை ரூ.1000 கோடிக்கு காங்கிரஸிடம் விற்றுவிட்டார். அவரின் செயலால் ஆந்திர மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார்.
சீரஞ்சீவிக்கு முதல்வர் பதவி மற்றும் பணத்தின் மேலும் தான் ஆசை. மக்கள் நலனில் அவருக்கு அக்கறை இல்லை. அவர் எப்பொழுதுமே ஆந்திர முதல்வராக முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications