குடியரசு தினவிழா: மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நெல்லையில் துவக்கம்
நெல்லை: நெல்லையில் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. 30 மாவட்டங்களைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான 54வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று மாலை துவங்கியது. துவக்க விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பகவதி வரவேற்றார். கதர் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் போட்டிகளை துவக்கி வைத்து டேபிள் டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசுகள், கேடயஙகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
மாநில அளவில் நடக்கும் இந்த விளையாட்டு போட்டியில் 30 மாவட்டங்கள், 16 மண்டலங்களைச் சேர்ந்த 5,200 மாணவ, மாணவிகள், 120 ஆசிரிய ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக தமிழக அரசு ரூ.29.86 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துளளது. போட்டிகளை முன்னிட்டு 12 வகையான குழு போட்டிகள் 15 இடங்களில் நடக்கின்றன. வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.19 லட்சம் ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த போட்டிகள் நாளை வரை தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது.












Click it and Unblock the Notifications