பசுபதி பாண்டியன் கொலை: சுபாஷ் பண்ணையார், கூட்டாளிகள் மும்பை, கேரளாவில் பதுங்கல்!
நெல்லை: பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய சுபாஷ் பண்ணையார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கேரளா மற்றும்மும்பையில் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நான்கு தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் கடந்த 10ம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதில் தொடர்புடைய ஆறுமுகசாமி, அருளானந்தன் ஆகியோர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தாடிகொம்பு போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்ததில் முன்விரோதம் காரணமாக தூத்துக்குடி மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உத்தரவின் பேரில் பசுபதி பாண்டியனை கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுபாஷ் பண்ணையார், ஆறுமுகச்சாமி, அருளானந்தம், ராஜபாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம், கொலையாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்ட நிர்மலா, கோழி அருள் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நிர்மலா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சுபாஷ் பண்ணையார், கோழி அருள் உள்பட 9 பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர். இவர்களை கைது செய்ய திண்டுக்கல் டிஎஸ்பி சுருளிராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர் அசோகன், தெய்வம், சுப்பிரமணியன், சிவகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சுபாஷ் பண்ணையார், கோழி அருள் உள்பட சிலர் கேரளா மற்றும் மும்பைக்கு தப்பிச் சென்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து தனிப்படையினர் நேறறு முன்தினம் அங்கு சென்று அவர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications