சசிகலா அண்ணன் மகன் மகாதேவன் வீட்டில் போலீஸார் திடீர் ரெய்டு

சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மூத்த மகன்தான் மகாதேவன். ஒரு காலத்தில் போயஸ் தோட்டத்தில் சர்வ அதிகாரத்துடன் தனது அத்தை சசிகலாவின் துணையுடன் வலம் வந்தவர் மகாதேவன். ஜெ. பேரவை மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். பின்னர் ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டு சமீபத்தில் ஒரேயடியாக விரட்டப்பட்டவர்.
தஞ்சாவூரில் வசித்து வரும் மகாதேவனுக்குச் சொந்தமாக மருத்துவமனை, பஸ்கள் உள்ளன. தற்போது தலைமறைவாகவுள்ள திவாகரனும், இந்த மகாதேவனும்தான் தஞ்சையில் சக்தி வாய்ந்த சசிகலா குடும்ப உறுப்பினர்கள் ஆவர். தற்போது திவாகரன் மீது வழக்குப் பாய்ந்துள்ளது. அவரும் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாகவே மகாதேவன் வீட்டில் ரெய்டு நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ரெய்டின்போது ஏதாவது சிக்கியதா என்பது தெரியவில்லை. அதிரடிப் பேர்வழியான மகாதேவன் கடந்த காலங்களில் ஆடிய ஆட்டம் அதிமுகவினர் நன்கு அறிந்தது. ஆனால் சமீப காலமாக அவர் சத்தம் போடாமல் இருந்து வந்தார். காரணம், ஜெயலலிதாவின் போக்கு மாறி வருவதை உணர்ந்து. வழக்கமாக டெண்டர் தருவது, நியமனம் உள்ளிட்டவற்றில் வாரி எடுக்கும் வள்ளலாக திகழ்ந்து வந்த மகாதேவன் தற்போதைய ஆட்சி வந்தது முதல் அதில் எதிலும் தலையிடாமல் கப்சிப்பென்று இருந்து வந்தாராம்.
தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் அரசு ஆவணம், ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கவே இந்த சோதனை நடந்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications