பாக்தாத்தில் 4 கார் குண்டுவெடிப்பு சம்பவங்கள்-14 பேர் பலி, 76 பேர் காயம்
பாக்தாத்: பாக்தாத்தில் இன்று நடந்த 4 கார் குண்டுவெடிப்பு சம்பவங்களில், 14 பேர் பலியாகினர். 76க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் கிழக்கே உள்ள சிட்டே மாவட்டத்தை சேர்ந்த பகுதியில் இன்று 2 கார் வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன.
சதர் நகரத்தில் தொழிலாளர்கள் கூடும் முக்கிய இடத்தில் இன்று அதிகாலையில் முதல் கார் குண்டு வெடித்தது. இதில் 8 பேர் பலியாகினர். மேலும் 21 பேர் காயம் அடைந்தனர்.
சில நிமிடங்களுக்கு பிறகு அதே மாவட்டத்தின் இன்னொரு பகுதியில் வெடிகுண்டு ஏற்றி வந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் 3 பேர் பலியாகினர், 26 பேர் காயம் அடைந்தனர்.
அதன்பிறகு ஷூலா பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளி அருகே காலை 10.30 மணிக்கு வெடிகுண்டு நிரப்பப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் 2 பள்ளி மாணவர்கள் பலியாகினர். மேலும் 16 மாணவர்கள் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அதேபோல ஹூரியா மாவட்டத்தில் உள்ள பரபரப்பான வியாபார பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியது. இதில் ஒருவர் பலியானார். 13 பேர் காயம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications