வெளிவட்டச்சாலை: எங்கள் திட்டத்தை ஜெ. தன்னுடையது போல அறிவித்துள்ளார்: கருணாநிதி
சென்னை: சென்னை வெளிவட்டச் சாலை திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக அல்ல திமுக அரசு கொண்டு வந்தது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தத் திட்டம் இப்போதுதான் ஜெயலலிதாவினால் அறிவிக்கப்பட்டதா என்றால் இல்லை. அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2011ம் ஆண்டு மே மாதம் சட்டப் பேரவையில் நெடுஞ்சாலைகள் துறையின் சார்பில் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில் ‘வண்டலூர் முதல் நெமிலிச்சேரி வரையிலான 30 கி.மீ நீளத்துக்கு ரூ.1,081.40 கோடி மதிப்பில் சென்னை வெளிவட்டச் சாலையினை பொது மற்றும் தனியார் பங்கேற்போடு வடிவமைத்தல், கட்டுதல், நிதி திரட்டுதல் முறையில் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டது. இந்தச் சாலைப் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் நவம்பர் 2012-ல் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது. எனவே அதிமுக ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பே முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை உணரலாம்.
இரண்டாவது கட்டப் பணிகளையாவது இப்போதுதான் ஜெயலலிதா அறிவித்துள்ளாரா என்றால் அதுவும் இல்லை.
மேற்குறிப்பிட்ட அதே கொள்கை விளக்கக் குறிப்பில், ‘நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான 32 கி.மீ நீள சாலை அமைக்கத் தேவையான நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்துக்கு ரூ.1,075.81 கோடிக்கு தோராய திட்ட ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மூலம் நிதி ஆதாரம் பெற தமிழக அரசால் மத்திய அரசின் நிதித் துறை மூலம் பிரேரணை அனுப்பப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.
இன்னும் சொல்லப்போனால் இந்தத் திட்டம் திமுக ஆட்சியில் 2009-ல் தெரிவிக்கப்பட்டு, முதல் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டாம் கட்டப் பணிகளும்கூட அறிவிக்கப்பட்டுவிட்டன. இதைத்தான் இப்போது ஜெயலலிதா புதிய அறிவிப்பு போல வெளியிட்டுள்ளார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுபோல் புதிய தலைமைச் செயலகக் கட்டடம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தினம் போன்றவற்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.