சென்னை வங்கியைக் கொள்ளையடித்தவர்களை சுட்டுப் பிடிக்க உத்தரவு
சென்னை: சென்னை பெருங்குடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில் புகுந்து துணிகரமாக ரூ. 24 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற வட மாநிலக் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் இருப்பதால் அவர்களைச் சுட்டுப் பிடிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கும்பல் பீகாரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் இருப்பதாகவும், சென்னைக்குள்தான் அவர்கள் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்களைப் பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெருங்குடி, துரைப்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி ஆகிய இடங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக தங்கியுள்ளனர். அதனால் அவர்கள் யாராவது கொள்ளையடித்துள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதிகளில் பல வீடுகளில் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டன. 500க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்தது.
இந்தி பேசும் சிலரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். ஆனால், கொள்ளையர்கள் பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை. சம்பவம் நடந்தவுடன், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். வாகன சோதனையும் நடத்தப்பட்டது. எனினும் யாரும் பிடிபடவில்லை.
கொள்ளையர்களை பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் இருந்து சில செல்போன்களை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். அந்த செல்போனை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொள்ளையர்கள் 2 துப்பாக்கி வைத்துள்ளனர். அதனால் தனிப்படை போலீசார் பிடிக்கும்போது, அவர்கள் மீது கொள்ளையர்கள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தலாம். இதனால் தனிப்படை போலீசார் ஆயுதத்துடன் தான் செல்ல வேண்டும். உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் தேவைப்பட்டால் கொள்ளையர்களை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என்று போலீஸ் தரப்பில் நம்பிக்கையுடன் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications