அப்பாடா, குடியரசு தின விழாவுக்கு தனிப்பட்ட தீவிரவாத மிரட்டல் இல்லை!
டெல்லி: பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக, தீவிரவாத குழுக்களிடமிருந்து, குடியரசு தின விழாவுக்கு தனிப்பட்ட மிரட்டல் எதுவும் இல்லை என்று பாதுகாப்புத்துறையினரும்,மத்திய அரசு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பொதுவான பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மேலும், தலைநகர் டெல்லியிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்றவற்றின்போது தீவிரவாதிகள் நாச வேலைக்கு திட்டமிடுவதாக உளவுப் பிரிவு தகவல் குறித்து எச்சரிக்கை விடுக்கும். இதையடுத்து அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்.
ஆனால் இந்த ஆண்டு குடியரசு தின விழாவின்போது தீவிரவாதிகள் நாச வேலைக்கு எதுவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட மிரட்டல் எதுவும் உளவுப் பிரிவுக்கு வரவில்லை. இதனால் பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டுமே இந்த முறை அரசு எடுத்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த முறை எந்தவிதமான குறித்த பாதுகாப்பு மிரட்டலும் வரவிலல்லை. எனவே பொதுவான பாதுகாப்பு உஷார் நிலையை மட்டுமே மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதேசமயம், முன்னெச்சரிக்கையாக டெல்லியில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளார்கள், விமானங்களைக் கடத்தி தாக்கலாம், மனித வெடிகுண்டுகள் ஊடுறுவியுள்ளனர், நக்சலைட்கள் தாக்கலாம் என்று உளவுப் பிரிவுக்குத் தகவல் வரும். ஆனால் இந்த முறை அப்படி எந்தத் தகவலும் இல்லையாம்.
குடியரசு தினத்தையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரின் அனைத்து நுழைவாயில்களிலும் டெல்லி போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று பிற்பகல் 12 மணி வரை குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் ராஜ்பாத் பகுதியில், விமானங்கள் பறக்க தலைநகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் நகரின் பல பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications