அரசு தடை எதிரொலி: பாட்னா ஐஐடி தலைவர் பதவியிலிருந்து விலகினார் மாதவன் நாயர்
லக்னோ: இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் அரசுப் பணியில் சேர மத்திய அரசு விதித்திருந்த தடையால் பாட்னா ஐஐடி தலைவர் பொறுப்பிலிருந்து அவர் இன்று விலகினார்.
"தடை தொடர்பான அரசின் ஆணை தமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் தாமாக முன்வந்து பதவி விலகுவதாக" நாயர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, எதனடிப்படையில் தாம் உட்பட 4 பேருக்கு தடை விதிக்கப்பட்டது என்று கேட்டுப் பெற உள்ளதாகவும் மாதவன் நாயர் கூறியுள்ளார்.
ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸும் நாயரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம், இஸ்ரோ தலைவராக மாதவன் நாயர் இருந்தபோது ஏற்படுத்தப்பட்டது. இதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக புகார்கள் வெடித்தன. இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தலையிட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.
இஸ்ரோவின் வர்த்த்க நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ், தேவாஸ் என்ற தனியார் அமைப்புக்கு விதிகளை மீறி எஸ் பாண்ட் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்தது என்பது புகார்.
ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டாலும் இது தொடர்பாக விசாரணை நடத்த் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. 5 பேர் கொண்ட குழுவின் தலைவராக முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சின்ஹா இருந்தார்.
இக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்தது.
மாதவன் நாயருடன் இஸ்ரோவின் முன்னாள் அதிகாரிகள் பாஸ்கர் நாராயணன், ஆண்ட்ரிக்ஸின் ஸ்ரீதர் மூர்த்தி, இஸ்ரோ சாட்டிலைட் முன்னாள் இயக்குநர் சங்கரா ஆகியோருக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications