என்மீது ஜெ தொடர்ந்துள்ள பொய்வழக்கை சட்டப்படி சந்திப்பேன் - முக ஸ்டாலின்
'சிறுதாவூர் பங்களா கட்டப்பட்டு உள்ள இடம் தலித் மக்களுக்குச் சொந்தமானது. அந்த இடமும் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. முதல்வர் ஓய்வுக்காக அங்கு சென்றுதான் தங்குகிறார். எனவே, இந்த இரண்டு நில ஆக்கிரமிப்பு புகார் குறித்து முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று காவல்துறையிடம் மு.க.ஸ்டாலின் புகார் கொடுத்திருந்தார்.
இந்த புகார் தன்னை அவமதிப்பதாக உள்ளது என்று கூறி முக ஸ்டாலின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இதுகுறித்து அவர் மயிலாடுதுறையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "அதிமுக ஆட்சியில் மக்கள் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மாறாக, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவதில்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள் ஆட்சியாளர்கள்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சொன்ன கருத்தைத்தான் நான் கூறினேன். அதற்காக, என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கை நான் கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை. இதனை சட்டப்படி சந்திப்பேன். ஜெயலலிதா போல் வாய்தா வாங்கிக் கொண்டு காலம் கடத்த மாட்டேன்," என்றார் ஸ்டாலின்.