ரூ.5 கோடி மதிப்புள்ள ராஜநாக விஷத்தை கடத்த முயற்சி: 2 வெளிநாட்டு வாலிபர்கள் கைது
திருவனந்தபுரம்: கொச்சியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தப்பட இருந்த ரூ. 5 கோடி மதிப்புள்ள ராஜநாக விஷத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வெளிநாட்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் செல்வதற்காக இருதினங்களுக்கு முன் 2 வெளிநாட்டு வாலிபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவருடைய உடமையை ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஸ்கேன் செய்தபோது சந்தேகத்துக்குரிய பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அந்நிறுவன ஊழியர்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சுங்கத்துறை அதிகாரிகள் வந்து அந்த வாலிபரின் பையை சோதனையிட்டனர்.
அதில் ஒரு ரகசிய அறையில் 16 ஆணுறைகளில் திரவப்பொருள் இருந்தது. அது போதைப் பொருளாக இருக்கலாம் என அதிகாரிகள் கருதினர். தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அது ராஜநாகத்தின் கொடிய விஷம் என தெரிந்தது. இதையடுத்து வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த ஜிம்மி வின்சென்ட், நைஜீரியாவைச் சேர்ந்த ஓடியாஸ் ஆஸ்டின் என்பது தெரிய வந்தது. இதில் ஆஸ்டின் தப்பியோடிவிட்டார்.
ஆனால் கண்காணிப்பு கேமராவில் ஆஸ்டினின் உருவம் பதிவாகி இருந்தது. அதை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சென்னைக்கு ரயில் மூலம் சென்றது தெரிய வந்தது. உடனே சென்னை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் பிடிக்கப்பட்டார். கைப்பற்றப்பட்ட பாம்பு விஷத்தின் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.












Click it and Unblock the Notifications