நெருங்கும் ஐ.நா. மாநாடு- அலறும் இலங்கை அரசு
கொழும்பு: ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்படுத்த தன்னார்வ நிறுவனங்களும் சில அரசியல் கட்சிகளும் சதி செய்வதாக இலங்கை அரசு புலம்பல் வெளியிட்டுள்ளது.
இதற்கு சில இலங்கை ஊடகவியலாளர்களும் உடந்தையாக இருப்பதாக இலங்கை அரசு கூறியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தையொட்டி இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் போராட்டங்கள் எதிர்வரும் வாரங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்தவும் சில கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே வடக்கு மற்றும் கிழக்கில் உடனடியாக சிவில் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்று தமிழர் பிரதேசமான மட்டக்களப்பில் ஜே.வி.பி.சார்பில் நேற்று துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் ஜே.வி.பி.யின் கிளர்ச்சிக் குழுவும் இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் இக்குழுவினர் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈழத்தில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது பெருமளவிலான தமிழர்களைக் கொன்று குவித்து பெரும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளது ராஜபக்சே அரசும், அதன் ராணுவமும். இதுதொடர்பாக சர்வதேச அளவில் பல்வேறு தரப்பிலும் வழக்குகள், குற்றச்சாட்டுகள், எதிர்ப்புகள் வலுவடைந்து வருகின்றன. இதனால் எப்போதுமே பீதியில் வாழும் நிலைக்கு ராஜபக்சேவும், அவரது அரசும் தள்ளப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications