அரசு சேவைகள், தகவல்கள் வழங்க ரூ.6 கோடியில் மக்கள் தொடர்பு மையம்: ஜெயலலிதா உத்தரவு
சென்னை: மக்களுக்குத் தேவையான தகவல்களை தெரிவிக்கவும், மக்களுடனான தொடர்புகளை மேம்படுத்தவும், பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த சேவைகளை ஒரே இடத்தில் குடிமக்களுக்கு வழங்கவும் ரூ.6 கோடி செலவில் ‘மக்கள் தொடர்பு மையம்' ஒன்றை ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
நவீன தொழில்நுட்பத் துறையில் நாளுக்கு நாள் ஏற்படுகின்ற மாற்றங்களை அரசு நடைமுறைகளில் புகுத்தி அதன் மூலம் அரசுத் துறையின் பணிகளை எளிதாக்கி ‘அரசை தேடி மக்கள்' என்ற நிலையை மாற்றி ‘மக்களை நாடி அரசு' என்கிற நிலையை உருவாக்க முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி மக்களுக்குத் தேவையான தகவல்களை தெரிவிக்கவும், மக்களுடனான தொடர்புகளை மேம்படுத்தவும், பல்வேறு அரசு துறைகளைச் சார்ந்த சேவைகளை ஒரே இடத்தில் குடிமக்களுக்கு வழங்கவும் ரூ.6 கோடி செலவில் ‘மக்கள் தொடர்பு மையம்' ஒன்றை ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த மையத்தின் மூலம் மக்கள் குறை தீர்ப்பு பற்றிய விவரங்கள், அரசு திட்டங்கள் குறித்த விளக்கங்கள், அரசு அலுவலகங்களின் தொடர்பு விவரங்கள், சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பெறுதல், மனுக்களின் இப்போதைய நிலை, மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் போன்ற மக்களுக்குத் தேவைப்படும் அனைத்து விவரங்களும் மக்கள் தொடர்பு மையத்தின் மூலம் வழங்கப்படும்.
இந்த மையத்தினை நாடு முழுவதும் இருந்து தொடர்பு கொள்வதற்கு ஒரே தொடர்பு எண் வழங்கப்படும். இதன் மூலம் மக்கள் எந்த இடத்தில் இருந்தும், இந்தத் தொடர்பு எண் மூலம் அனைத்து விவரங்களையும் எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.
மக்களின் தேவைக்கேற்ப புதுமையான மற்றும் சிறந்த மின் ஆளுகைக்கான மென்பொருட்கள் உருவாக்குகின்ற இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் மின் ஆளுகை ஆர்வலர்களுக்கான ‘மின் ஆளுகைக்கான முதல்வரின் உயரிய விருது' ஆண்டுதோறும் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி செல்போன் தொழில்நுட்பத்தைக் கொண்டு மென்பொருள் உருவாக்கம் என்ற பிரிவின் கீழ் ஒரு விருதும், மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் புதுமையான பொருள் உருவாக்கம் என்ற பிரிவின் கீழ் ஒரு விருதும், நரம்பியல் வலையமைப்பை (நியூரல் நெட்வொர்க்) கொண்டு மென்பொருள் உருவாக்கம் என்ற பிரிவின் கீழ் மற்றொரு விருதும் என மூன்று பிரிவுகளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ‘மின் ஆளுகைக்கான முதல்வரின் உயரிய விருது' ஆண்டுதோறும் வழங்கப்படும்.
இந்தப் போட்டியில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 18 வயதினை கடந்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் அதிகபட்சம் 8 பேர் கொண்ட ஒரு குழு மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
மூன்று பிரிவின் கீழ் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர், தமிழ்நாடு மின் ஆளுகை முகமையின் முதன்மை செயல் அலுவலர், ஐ.சி.டி. அகாதெமியின் முதன்மை செயல் அலுவலர், புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து மூன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு தேர்வுக் குழு அமைக்கப்படும். வெற்றி பெறுவோருக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கோப்பையும் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications