முல்லைப் பெரியாறு- நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த வேண்டாம் என எம்.ஜி.ஆர். சொன்னாரா?

இதுதொடர்பாக நேற்று நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்த ராஜா முகமது, மின்சாரத்துறை அமைச்சராக இருந்த சாமிநாதன், கல்வித்துறை அமைச்சராக இருந்த அரங்கநாயகம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது நீர்பாசனத்துறை அமைச்சராக நான் (ராஜா முகமது) இருந்தேன். எம்.ஜி.ஆர். என்றுமே முல்லை பெரியாறு அணைக்கட்டு நீர்தேக்கத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த வேண்டியதில்லை என்று பேசியது இல்லை. மத்திய அரசுக்கு அச்சுதானந்தன் கூறுவது போல் கடிதம் எழுதியதுமில்லை.
1979-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய நீர்வள ஆணையத்தலைவர் கே.டி. தாமஸ் முல்லை பெரியாறு அணையை பார்வையிட்டு நீர் வடிக்கட்டிகள், ட்ரெய்னேஜ் காலரி வைக்கவும், வெள்ளம் வழிய 3 பெரிய கண் மதகுகள் கட்டவும் வலியுறுத்தினார். பாலம் பலவீனமானதாய் இருப்பதால் அல்ல, காலத்திற்கு ஏற்றப்படி டிசைன் செய்ய கூறினார்.
மேற்படி திருத்தப்பணிகள் செய்ய நீர் தேக்கத்தை 136 அடிக்கு குறைக்க வேண்டியிருந்தது. அதற்கு தான் எம்.ஜி.ஆர். சம்மதித்தார். நிரந்தரமாக நீர்தேக்கம் 136 அடியாக இருந்தால் போதுமென்று அவர் சொல்லவில்லை.
1980-ல் பணிகள் முடித்து மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரை சந்தித்தபோது கமிஷன் தலைவர் பழைய அணை புதிய அணை போல் ஆகி விட்டது. நிச்சயம் 145 அடி உயர்த்தலாம் என்று கூறினார். அது கமிஷன் மினிட்சில் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி கேரளாவில் ஆட்சியிலிருந்த போது, நீர் மட்டத்தை 145 அடியாக உயர்த்த வேண்டுமென்று போராட்டம் நடத்தியது தனது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் என்பதை அச்சுதானந்தனுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
தென் தமிழ்நாட்டு விவசாயிகளின் உயிர் பிரச்சினை என்பதை மறந்து புது அணை கட்டலாம் என்பதும், இருக்கிற அணையின் சுவரை இடிப்பதும், தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர் மத்திய பாதுகாப்பு அமைச்சர் என்ற தைரியத்தில் தமிழ்நாடு அரசுக்கு தெரியாமல் அணைப்பகுதியில் ராணுவ கப்பற்படையின் மூலம் ஆய்வு செய்வதும், கேரள அமைச்சர் ஒருவர் அணையை உடைப்போம் என்பதும் மிகவும் ஆத்திரமூட்டும் செயல்கள் மாத்திரமல்ல. உச்ச நீதிமன்றத்திற்கும் மத்திய அரசுக்கும் அடங்க மாட்டோம் என்று கேரளா சொல்வதற்கும் ஒப்பாகும். அரசியல் சட்ட விதிகளின் படி கேரளா அரசை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்த மறுக்கும் கேரள அரசு 1980-லிருந்து 2005 வரை தமிழகத்திற்கு ரூ.3 ஆயிரத்து 250 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில, மத்திய அரசு அனுமதியில்லாமல் முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவை குறைக்கும் நோக்கத்துடன் கட்டப்பட்ட 4 துணை அணைகளை கேரளா அரசு அகற்ற வேண்டும். 152 அடி உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையை விட 555 அடி உயரமுள்ள இடுக்கி அணையை தமிழ்மாநில, மத்திய அரசு சம்பந்தம் இல்லாமல் கட்டியதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மொழி வழி மாகாணம் பிரிக்கும் ஆணையமே தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க அப்போது பரிந்துரை செய்திருந்தது. ஆகவே, தேவிகுளம், பீர்மேட்டை தமிழகத்தோடு இணைக்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைத்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இதற்காக வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு சிறப்பு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். தமிழகத்தோடு பீர்மேடு, தேவிகுளம் பகுதியை இணைக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications