மனிதநேய மக்கள் கட்சியின் புதிய தலைவர் ரிபாயி
சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவராக ஜே.எஸ்.ரிபாயி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் சென்னை தாம்பரம் மற்றும் மேடவாக்கத்தில் நடைபெற்றது.
இதில் மாநில புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக த.மு.மு.க. மூத்த தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளராக தமீமுன் அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் நிர்வாக குழு மூத்த தலைவர்களாக தாமும், ஹைதர் அலியும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.
தீர்மானங்கள்
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், தானே புயலால் தமிழகம் மற்றும் புதுவையில் ஏற்பட்டுள்ள சேதத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்கு வங்க அரசைப் போல தமிழக அரசும் அணு உலைகளை அனுமதிக்கப்போவதில்லை என அறிவிக்கவும் மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு எதிராக வழக்கு
தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்று தர மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications