கொடைக்கானலில் போதையில் ஆற்றில் குளித்த பெங்களூர் என்ஜினியர் பலி!
கொடைக்கானல்: கொடைக்கானல் ஆற்றில் குடிபோதையில் தனது காதலியுடன் குளித்த பெங்களூர் என்ஜினியர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினார்.
பெங்களூர் ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் பூவையா. அவரது மனைவி கங்கா. அவர்களது மகன் செங்கப்பா (30). சாப்ட்வேர் என்ஜினியர். அவர் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வினிதா (28) என்ற பெண்ணை காதலித்து வந்தார். வினிதா ஒரு பல் மருத்துவர்.
நேற்று முன்தின் செங்கப்பாவின் பிறந்தநாள் ஆகும். பிறந்தநாளை காதலியுடன் கொண்டாட விரும்பிய அவர் வினிதாவை அழைத்துக் கொண்டு கொடைக்கானலுக்குச் சென்றார். அங்கு பேத்துபாறை பகுதியில் உள்ள ஒரு ரிசார்டில் தங்கினார்கள். அங்கு செங்கப்பா தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
பின்னர் அவர்கள் இருவரும் ரிசார்டுக்கு அருகில் ஓடும் ஆற்றில் குளித்தனர். அப்போது செங்கப்பாவை ஆற்றுநீர் இழுத்துச் சென்றது. அவரைக் காப்பாற்ற முயன்ற வினிதாவின் அலறல் சத்தம்கேட்டு ரிசார்ட் ஊழியர்கள் ஓடி வந்து செங்கப்பாவின் உடலை மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வினிதாவை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது,
செங்கப்பாவின் பிறந்தநாளைக் கொண்டாடவே நாங்கள் இங்கு வந்தோம். இங்குள்ள ரிசார்டில் காலையில் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு நாங்கள் மது அருந்தினோம். பிறகு மாலையிலும் மது அருந்திவிட்டு ஆற்றில் குளிக்கச் சென்றோம்.
ஆற்றில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது பாறை வழுக்கி செங்கப்பா ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டார். நான் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. என்னால் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை என்றார்.
இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications