சனீஸ்வரன் கோவிலுக்கு வந்த இலங்கை தமிழ் அமைச்சருக்கு சிறுத்தைகள் கருப்புக் கொடி
திருநள்ளாறு: சனீஸ்வரன் கோவிலுக்கு வந்த இலங்கை அமைச்சருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி ஆவேசமாக கோஷமிட்டதால் அவர் பயந்து போனார். இதையடுத்து போலீஸார் மிகவும் கஷ்டப்பட்டு அமைச்சரை அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் சனிக்கிழமை பக்தர்கள் வந்து ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். நேற்று இரவு சுமார் 9 மணியளவில் இலங்கை அமைச்சர் தொண்டமான் தரிசனம் செய்யவந்தார். கோயிலுக்குள் சென்று தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 20 பேர் அமைச்சர் வருகையை கண்டித்து, ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு கறுப்புக் கொடி காட்டினர்.
போலீசார் அவர்களை தடுக்க முயற்சி மேற்கொண்டும் பயனில்லை. இலங்கை அதிபருக்கு எதிராக ஆவேசமாக அவர்கள் கோஷம் எழுப்பினர். தமிழர்களுக்கு எதிராக நடந்துகொள்ளும் போக்கை கைவிடும்படி ஆவேசமாக பேசினர்.
அதே வேளையில் அமைச்சரை பாதுகாப்புடன் காரில் ஏற்றி அனுப்பிவைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அமைச்சர் வருகை குறித்து கோயில் நிர்வாகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அமைச்சருக்கு கறுப்புக் கொடி காட்டிய பிரச்சனையால் திருநள்ளாறு கோயில் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில்தான் ராஜபக்சேவின் மச்சானுக்கு ராமேஸ்வரத்தில் வைத்து தமிழர் அமைப்புகள் செருப்படி கொடுத்து கடும் தாக்குதலைத் தொடுத்தன. இந்த நிலையில் தற்போது தொண்டமானுக்கு எதிராக போராட்டம் நடந்துள்ளதால் இலங்கைத் தலைவர்கள் தரப்பில் சற்றே பீதி ஏற்பட்டுள்ளாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications