முல்லைப் பெரியாறு: தமிழக ஆளுநர் உரைக்கு கேரளா எதிர்ப்பு
திருவனந்தபுரம்; முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளா அரசு பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்வதாக தமிழக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் எதிர்த்துத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ரோசைய்யா, முல்லை பெரியாறு அணை தமிழகத்தின் கட்டுபாட்டில் இருக்க வேண்டும். 2010ம் ஆண்டு அணை பாதுகாப்பு சட்டத்தில் இதை உறுதி செய்ய வேண்டும். பெரியாறு அணை பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள மதித்து செயல்பட வேண்டும். முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளா பொய் பிரச்சாரம நடத்தி மக்களிடம் பீதியை கிளப்புகிறது என்று குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஜே. ஜோசப், முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
மேலும் புதிய அணை கட்டினால் அணையின் உரிமை, கட்டுபாடு கேரளாவிடம் தான் இருக்கும். அணையின் உரிமையை எந்த காரணத்தை கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளா பொய் பிரச்சாரம் நடத்துவதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அணையின் உண்மை நிலைதான் மக்களிடம் எடுத்து கூறப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஜோசப் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications