சட்டசபை தேர்தல்: பஞ்சாபில் 77, உத்தரகண்டில் 70 சதவீத வாக்குகள் பதிவு!
சண்டிகர்: பஞ்சாப் மற்றும் உத்தரகண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் 77 மற்றும் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆளும் இந்த 2 மாநிலங்களிலும் மாற்றம் வேண்டி தான் மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.
பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் நேற்று சட்டசபை தேர்தல் நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் காலையில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. ஆனால் நேரமாக ஆக வாக்குப்பதிவு விறுப்விறுப்பாக நடந்தது. இரண்டு மாநிலங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது. 5 மணி நிலவரப்படி பஞ்சாபில் 77 சதவீதமும், உத்தரகண்டில் 70 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தன. இந்த 2 மாநிலங்களிலும் தேர்தல் அமைதியாக நடந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பஞ்சாபின் லூதியானா, பதின்டா மற்றும் அம்ரித்சரில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. லூதியானாவில் நடந்த மோதலில் பாஜக யுவ மோர்ச்சா பொதுச் செயலாளர் சஞ்சய் கபூருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் பதின்டாவின் அம்ரிக் சிங் ரோட்டில் உள்ள தேரா சச்சா சௌதா அலுவலகம் மீது சிலர் கல்வீசியுள்ளனர்.
பஞ்சாபில் உள்ள 117 சீட்களுக்கு 1078 பேர் போட்டியிட்டுள்ளனர். இதே போன்று உத்தரகண்டில் மொத்தம் உள்ள 70 இடங்களுக்கு 866 பேர் களத்தில் உள்ளனர். வரும் மார்ச் 6ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
பஞ்சாபில் அகாலி தளம், பாஜகவையும் மற்றும் உத்தரகண்டில் ஆளும் பாஜகவையும் தோற்கடிக்க காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் குறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அம்ரிந்தர் சிங் கூறுகையில், கடந்த 2007ம் ஆண்டு தேர்தலைப் போன்று தற்போதும் தேரா சச்சா சௌதா எங்களுக்கு ஆதரவாக உள்ளது. எங்களுக்கு குறைந்தது 70 இடங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அகாலி தளத்தை ஆட்சியில் இருந்து இறக்கவே மக்கள் விரும்புகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications