விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் வழக்கு-விசாரணை பிப். 20க்கு தள்ளிவைப்பு
சென்னை: விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை பிப்ரவரி 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு 1992-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. அதன்பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்து 2010-ம் ஆண்டு மே 14-ந் தேதி மத்திய அரசும், மே 17-ந் தேதி தமிழக அரசும் உத்தரவிட்டன. இதுகுறித்து இதுதொடர்பான தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.
அப்போது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்த வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரி மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை தீர்ப்பாயம் நிராகரித்தது. அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்தது சரிதான் என்றும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்குத் தொடர்ந்தார். நீதிபதிகள் எலிபி தர்மாராவ், கிருபாகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தமிழக அரசு தனது கருத்தை தெரிவிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 20-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ, இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications