ராவணன் பாஸ்போர்ட் முடக்கம்..அடுத்து குண்டாஸ்?
கோவை: சசிகலாவின் சித்தப்பா மருமகன் ராவணன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படு்வது உறுதியாகி விட்டது. முதல் கட்டமாக அவரது பாஸ்போர்டடை போலீஸார் முடக்கியுள்ளனர். அடுத்து விரைவில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயவுள்ளது.
ராவணன், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி நாமக்கல் மாவட்டங்களில் அ.தி.மு.க.வினரிடம் பதவி வாங்கித் தருவதாக பணம் வசூலிப்பில் ஈடுபட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த காண்டிராக்டர் ரவிக்குமார் என்பவரை கடத்திச் சென்று ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் ராவணன் கைது செய்யப்பட்டார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராவணன் மீது மோசடி, பணம் பறிப்பு, கடத்தி வைத்து கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்தி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், மணல் குவாரிகளை எடுத்து தருவதாக கூறி, ராவணன் தன்னிடம் ரூ.1 கோடி வாங்கினார் என்றும், ஆனால் குவாரிகளை குத்தகைக்கு எடுத்து தரவில்லை என்றும், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது கொன்று விடுவதாக ராவணன் மிரட்டியதாகவும் அந்த புகாரில் கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராவணன் கோவையில் யார்-யாரிடம் தொடர்பில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை வாரி சுருட்டினார் என்பது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார், ராவணனுக்கு சொந்தமான ராகா ஆயில் மில் மேலாளர் குலோத்துங்கன், ஆயில் மில் பங்குதாரர் தமிழ்மணி, முன்னாள் தி.மு.க. எம்.பி.யின் உறவினர் விஜயகுமார், ராவணனின் கல்லூரி தோழர் ஆனந்தகுமார், மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். 5 பேரிடமும் தனித்தனியாக இந்த விசாரணை நடைபெற்றது.
ராவணன் கோவையில் யார்-யாருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டு இருந்தார், அவரது ஆதரவாளர்கள் யார்-யார்? அரசு அதிகாரிகள், மற்றும் கட்சி பிரமுகர்களிடம் பணம் வசூலித்தது எப்படி? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுள்ளது. ராவணனின் கூட்டாளிகள் 5 பேருமே, போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தமிழ்மணி, குலோத்துங்கன், விஜயகுமார், ஆனந்தகுமார், கிருஷ்ணகுமார் ஆகிய 5 பேரையும் விசாரணைக்கு பின்னர் நிபந்தனையின் பேரில் போலீசார் விடுவித்தனர். இவர்கள் வெளியூர், வெளிமாநிலம் செல்லக்கூடாது என்றும், விசாரணைக்கு போலீசார் எப்போது அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் ராவணன் முன்னாள் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் செல்வராஜை கொலை செய்தார் என்ற புகாரும் கிளம்பியுள்ளது. தொடர்ந்து அவர் மீது புகார்கள் குவிவதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அவர் மீது இதுவரை காரமடையில் ஒரு வழக்கும், சென்னையில் ஒரு வழக்கும் பதிவாகி உள்ளது. கோவை நகர குற்றப்பிரிவு போலீசிலும் 2 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார் மனு தொடர்பாக வழக்குப்பதிவு செய்வது குறித்தும் கோவை போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது ராவணனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுவிட்டது. அவரது துப்பாக்கி உரிமமும் ரத்தாகவுள்ளது.
இதற்கிடையே, ராவணன் சார்பில் ஆஜர் ஆன அவரது வழக்கறிஞர், மேட்டுப்பாளையத்தில் உள்ள கோவை மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு எம்.கே.ரபி, வழக்கு விசாரணையை 2-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications