சென்னையில் நேற்றிரவு முக்கால் மணி நேரம் நல்ல மழை!
சென்னை: சென்னை நகரிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் நேற்று இரவு திடீரென பெய்த மழையால் மக்கள் வியப்படைந்தனர். இந்த மழையால் நகரின் பல இடங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
தமிழகத்தில் தற்போது வட கிழக்குப் பருவ மழைக்காலம் முடிந்து விட்டது. இருப்பினும் பருவக் காற்றுக்காலம் இன்னும் முடியவில்லை என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவித்துள்ளது.
சமீ்ப நாட்களாக தமிழகத்தில் பனி அதிகமாகவே இருந்து வருகிறது. மாலையில் ஆரம்பித்து காலை வரை பனியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் சில நாட்களாக பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இதனால் மழை வருமோ என்று மக்கள் நினைத்திருந்த நேரத்தில் நேற்று நள்ளிரவுக்கு மேல் திடீரென மழை பெய்தது.
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும், போரூர், பூந்தமல்லி, தாம்பரம், குரோம்பேட்டை, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. சுமார் முக்கால் மணி நேரம் பெய்த இந்த மழையால் நகரே மேலும் குளிராகிப் போனது.
மழை காரணமாக நகரின் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது. இருப்பினும் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications