ஏற்கனவே சொன்னதையே ஆளுநர் உரையில் திருப்பிச் சொல்லியுள்ளனர்-விஜயகாந்த்

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
ஆளுநர் உரை ஆண்டுதோறும் வழக்கமாக அளிக்கப்படுகின்ற உரையாக உள்ளதே தவிர, மக்களின் நினைவுகளில் நிற்கத் தக்க புதிய திட்டங்கள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. மக்களிடையே சட்டம், ஒழுங்கு சரியில்லை என்ற கருத்து நிலவுகிறது. ஆளுநர் உரை அதை உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை.
ஏற்கனவே விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்றவை பெரும் சுமையாக உள்ளது. அனைத்து கட்சியினரும் இதை எடுத்துக் காட்டியும் கூட ஆளுநர் உரை மூலம் பாமர மக்களுக்கு எந்த பரிகாரமும் கிடைக்கவில்லை.
மின் தட்டுப்பாடு ஓரளவுக்காவது நீங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் ஆளுநர் உரையில் இல்லை.
இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு தானே புயலால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டு, குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகை மாவட்ட மக்களின் மறுவாழ்வுக்கான தொலை நோக்கோடு கூடிய திட்டங்கள் எதுவும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்படவில்லை.
கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம், முல்லைப் பெரியாறு அணை நீர்த் தேக்கப் பிரச்சினை, மீனவர்கள் தினந்தோறும் கச்சத்தீவுப் பகுதியில் படும் அவதி போன்றவைகளில் இந்திய அரசு தொடர்ந்து அலட்சியப் போக்கை மேற்கொண்டு வருவதும், தமிழக அரசின் சார்பில் கடந்த காலத்திலும் சரி, இப்பொழுதும் சரி, அதற்காக இந்திய அரசை வற்புறுத்துகிறோம் என்ற நிலைதான் தொடர்கிறதே தவிர, இவற்றிற்கான தீர்வு எதையும் தமிழ்நாட்டு மக்களால் இதுவரை பெற இயலவில்லை.
பொதுவாக தமிழகத்தின் வளர்ச்சி விகிதம், வறுமை ஒழிப்பு திட்டம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற எதை எடுத்துக் கொண்டாலும், கடந்த கால ஆளுநர் அறிக்கைகளில் சொல்லப்பட்டவை மீண்டும் மறு பதிப்பாகத்தான் இந்த ஆளுநர் உரையிலும் இடம் பெற்றுள்ளது. ஆளுநர்தான் புதியவரே தவிர, ஆளுநர் உரை புதியதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications