சென்னை அருகே வி்மானப்படை பயிற்சி விமானம் ஏரியில் விழுந்தது-2 விமானிகளும் தப்பினர்
சென்னை: சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி நிலையத்திலிருந்து பயிற்சிக்காக சென்று கொண்டிருந்த கிரண் ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால் அதில் இருந்த பயிற்சி அதிகாரியும், பயிற்சி எடுத்த வீரரும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர். விமானம் சென்னை அருகே உள்ள ஏரியில் விழுந்து நொறுங்கியது.
சென்னை கிழக்கு தாம்பரத்தில் விமானப்படையின் பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு கிரண் ரக குட்டி விமானம் ஈடுபடுத்தப்படும்.
நேற்று காலை இதுபோன்ற ஒரு விமானத்தில் விமானப்படை அதிகாரி சி.ஜே. தீபக் மற்றும் வீரர் சிங் ஆகியோர் பயிற்சிக்காக கிளம்பினர். சிங்குக்கு தீபக் பயிற்சியளித்தார்.
ஒரு மணி நேர பயிற்சிக்குப் பின்னர் தாம்பரத்திற்கு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. விமானத்தை தரையிறக்க முடியவில்லை. இதையடுத்து விமானப்படை தளத்திற்குத் தகவல் கொடுத்னர்.
அதைத் தொடர்ந்து ஊரப்பாகத்தில் உள்ள ஐயஞ்சேரி ஏரியை நோக்கி விமானத்தைத் திருப்பினர். அங்கு சென்றதும் இரு விமானப்படையினரும் பாராசூட் மூலம் கீழே குதித்தனர். விமானம் ஏரியில் விழுந்து நொறுங்கியது.
கீழே குதித்தபோது இரு விமானப்படையினருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. விரைந்து வந்த விமான தள அதிகாரிகள் இருவரையும் மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏரியில் விழுந்து சேதமடைந்த விமானத்தை தீயணைப்புப் படையினருடன் இணைந்து விமானப்படையினர் கயிறு கட்டியும், கிரேன் உதவியுடனும் மீட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டொம் என்று பெரும் சப்தத்துடன் விமானம் ஏரியில் விழுந்ததால் ஏற்பட்ட சத்தம் சுற்றுப்புற மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து விழுந்த விமானத்தை பார்த்தனர்.












Click it and Unblock the Notifications