2ஜி ஒதுக்கீட்டால் இழப்பு இல்லை என்று கூறிய சிபல் ராஜினாமா செய்ய வேண்டும்: சி.பி.எம்.
டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படவில்லை என்று கூறிய தற்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் நிலோத்பால் பாசு கூறியுள்ளதாவது:
உச்சநீதிமன்றத் தீப்பானது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கணக்குத் தணிக்கைக் குழுவின் குற்றச்சாட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2ஜி ஊழலை பிரதமரும் கூட நியாயப்படுத்தி வந்தார். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படவில்லை என்று கூறி வந்த கபில் சிபல் உடனடியாக தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நிதி
அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்கும் தார்மீக பொறுப்பு உள்ளது என்றார் அவர்.
மெளனம் கலைக்கட்டும் மன்மோகன்
மேலும் மார்க்சிஸ்ட் கட்சி பொலிட்பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்தாவது பிரதமர் மன்மோகன்சிங் மெளனம் கலைக்க வேண்டும். தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவற்றை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"2 ஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது" என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு (பொலிட்பீரோ) உறுப்பினர் பிருந்தா காரத் கருத்து தெரிவித்துள்ளார்.