2ஜி விசாரணையை கண்காணிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக சிபிஐ நடத்தி வரும் விசாரணையைக் கண்காணிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது.
அனைத்து ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க எஸ்ஐடி எனப்படும் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கோரியிருந்தார். இதுதொடர்பாக அவர் 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் மீது இன்று நீதிபதிகள் சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது. அப்போது, 122 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெற்றிருந்த 2ஜி உரிமத்தையும் ரத்து செய்வதாக அறிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையைக் கண்காணிக்க எஸ்ஐடி தேவையில்லை என்று கூறி விட்டனர்.