மிகுந்த வேதனையோடு வேறு வழியின்றிதான் பஸ் கட்டணத்தை உயர்த்தினோம்: ஜெயலலிதா

சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் உறுப்பினர் செளந்தர்ராஜன் பால் விலை உயர்வு, பஸ் கட்டணம் உயர்வைக் குறிப்பிட்டுப் பேசினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறுகையில், பால் உற்பத்தி மற்றும் உபபொருட்கள் விற்பனையானாலும் சரி, போக்குவரத்துத் துறையானாலும் சரி, தனியார் துறையோடு போட்டி போட்டு, லாபம் சம்பாதிப்பது அரசுத் துறைகளின், அரசு நிறுவனங்களின் நோக்கம் அல்ல. தனியார் துறையுடன் போட்டி போடுவது அரசு நிறுவனத்தின் வேலையும் அல்ல; லாபம் ஈட்டுவது அரசின் நோக்கமும் அல்ல.
எங்கெல்லாம் தனியார்த் துறை, தனியார் பேருந்துகளை இயக்க விரும்பவில்லையோ, அங்கெல்லாம் இயக்க வேண்டியது அரசின் கடமை. லாபம் ஈட்டும் வழித்தடங்களை மட்டும் அரசு தேர்ந்தெடுக்க முடியாது. தனியார் துறையினர் பேருந்துகளை இயக்க விரும்பாத வழித்தடங்களில் இயக்குவதுதான் அரசின் கடமை. ஆகவே, வெறும் லாப- நஷ்டக் கணக்கைப் பார்த்து, அரசு நிறுவனங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் செயல்படவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
மேலும், பேருந்துக் கட்டணத்தைப்ப ற்றித் திரும்பத் திரும்ப இங்கே பேசுகின்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எந்த அரசும், குறிப்பாக, அதிமுக அரசு, விரும்பி மக்கள் மீது எந்தச் சுமையையும் திணிக்க விரும்புவதில்லை. அதிமுக எப்போது ஆட்சியில் இருந்தாலும், மக்கள் மீது இருக்கின்ற சுமையைக் குறைக்க வேண்டுமென்றுதான் எண்ணுகிறோமே தவிர, நாங்கள் மனதார விரும்பி எந்தக் கட்டணத்தையும் ஏற்றவில்லை.
கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியில், போக்குவரத்துக் கழகங்கள் எல்லாம், எப்படி நிர்வாகச் சீர்கேட்டினால் திவாலாகும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டன என்பது மாண்புமிகு உறுப்பினருக்கு நன்றாகவே தெரியும். தெரிந்து அவர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறார். ஆகவே, இன்றைக்கு இந்த நடவடிக்கைகளை எடுத்ததால்தான், போக்குவரத்துக் கழகங்களைக் காப்பாற்ற முடிந்திருக்கிறது. அதனால்தான், மீண்டும் பேருந்துகளைத் தொடர்ந்து இயக்க முடிகிறது.
பேருந்துக் கட்டணங்களை உயர்த்தவில்லை என்றால் போக்குவரத்துக் கழகங்களையே இழுத்து மூடவேண்டிய ஒரு நிலைதான் ஏற்பட்டிருக்கும்; எல்லாமே திவாலாகியிருக்கும். அடகு வைத்திருக்கின்ற போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான சொத்துக்களையும் மீட்டெடுக்க முடியாது.
ஆகவே, மக்களுக்குத் தொடர்ந்து தரமான சேவை வழங்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம். அதனால்தான், மிகவும் வேதனைப்பட்டு, வேறு வழியின்றி எல்லாவற்றையும் தெளிவாக மக்களுக்கே விளக்கிச் சொல்லி, அதன் பிறகுதான் இந்தப் பேருந்துக் கட்டண உயர்வுகளை நாங்கள் நிகழ்த்தியிருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications