ஊழல்வாதிகளை கைது செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை!
தேனி: வைகை உயர் தொழில் நுட்ப நெசவுப்பூங்கா பணிகளில் ஊழல் செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சாமியார் மடத்தில் கடந்த 2004 ம் ஆண்டு 100 கோடி திட்டத்தில் வைகை உயர்தொழில் நுட்ப நெசவுப்பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
இதன் மூலம் இப் பகுதியில் உள்ள 20 ஆயிரம் நெசவாளர்கள் நேர் முகமாகவும் 10 ஆயிரம் நெசவாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெறும் வகையில், தமிழக அரசு சார்பில் 4 கோடியே 72 லட்சம் ரூபாய் வங்கியில் போட்டது.
மத்திய அரசு 2.5 கோடியும் 91 உறுப்பினர்கள் சார்பில் ஒன்றைகோடி நிதியும் முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டது, இதனைதொடர்ந்து 40.6 ஏக்கர் இடம் வாங்கப்பட்டு 91 யூனிட்டுகள் செயல்பட கட்டுமானப்பணிகள் தொடர்ந்தன. ஆனால் 9 ஆண்டுகள் ஆகியும் பணிநிறைவு பெறாததால் நெசவாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாய் உள்ளது.
ஊழல் விசாரணை
பூங்காவிற்கு இடம் வாங்கிய வகையிலும் ஊழல் நடந்திருப்பதாகவும், 15 ஆண்டுகளே தொழிற்சாலை கட்டிடம் ஆயுட்காலமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் பணிகள் 9 ஆண்டுகளாக நிறைவு பெறாததால் மத்திய அரசு இப்பணிகளை நிறுத்த உத்தரவிட்டு தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் அனுப்பி தற்போது அதன் பேரில் விசாரனை நடந்து வருகிறது.
இந்த நிலையில் பணிகளை தொடர்ந்து நடத்தி 30 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் முடித்து தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், ஊழல் செய்தவர்களை கைது செய்யக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெசவுப் பூங்காவில் ஊழல் செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.