தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து: இலங்கை விருப்பம்

இந்தியா-இலங்கை இடையேயான வர்த்தகக்தை அதிகரிப்பதற்காக தூத்துக்குடி-கொழும்பு இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஸ்காட்டியா பிரின்ஸ் என்ற கப்பல் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டது. 1000 பேர் பயணம் செய்யக் கூடிய இதில் வெறும் 200 பேர் மட்டுமே பயணம் செய்தனர். போதுமான வருமானம் இல்லாதது மற்றும் சட்ட சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்க இலங்கை கப்பல் போக்குவரத்து துறை விருப்பம் தெரிவித்துள்ளது. புதிதாக இயக்கப்பட உள்ள கப்பல் 500 பேர் பயணம் செய்யக் கூடியதாக இருக்கும்.
இது தொடர்பாக இந்தியாவிலும், இலங்கையிலும் பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கப்பல் போக்குவரத்தை நிர்வாகிக்க விருப்பம் உள்ள தனியார் நிறுவனங்கள் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும், பரிசீலினைக்கு பிறகு தேர்வு செய்யப்படும் நிறுவனத்தின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் இலங்கை கப்பல் துறை தெரிவித்துள்ளது.
வாரத்திற்கு 2 முறை செல்லும் வகையில் தொடங்கப்பட்டது இந்த கப்பல் சேவை. ஆனால் இந்தியாவும், இலங்கையும் எதிர்பார்த்தபடி, கப்பல் போக்குவரத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.
இதேபோல் ஆயிரம் பேர் வரை செல்லும் வகையிலான அந்த கப்பலில் 200-க்கும் குறைவான பயணிகளே பயணம் செய்ததால் கப்பல் போக்குவரத்து நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது.
மேலும் கப்பலை இயக்கி வந்த நிறுவனம் மீது, ரூ.ஒன்றரை கோடி கடன் பாக்கி புகார் எழுந்ததால் பிரச்சினை முடியும் வரை அந்த கப்பலை கொழும்பு துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கும்படி, அங்குள்ள வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், தொடங்கிய வேகத்திலேயே சில மாதங்களில் கொழும்பு-தூத்துக்குடி இடையிலான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நிறுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக இலங்கை அரசு சார்பில், இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த விருப்பம் உள்ள தகுதி வாய்ந்த கப்பல் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே, தகுதி வாய்ந்த நிறுவனங்கள் வருகிற 20-ந் தேதி வரை விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாக கொழும்பு கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications