உள்ளதும் போச்சே.. விஜய்யால் தெருவுக்குப் போன வேலுமணி! ஷாக்கில் சண்முகம்! ஆனாலும்.. ஒரே ஒரு சான்ஸ்!
சென்னை: தமிழக அரசியலில் தற்போது அதிகமாக கவனிக்கப்பட்டு வரும் விஷயம் என்றால் அது அதிமுகவின் உட்கட்சி மோதல் தான். தேர்தல் தோல்விக்குப் பிறகு ஏற்கனவே அதிமுக பலவீனமடைந்திருந்த கட்சியில், தற்போது எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் அணியின் அடுத்த கட்ட முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது. தவெக அரசுக்கு ஆதரவு அளித்த பிறகும் அந்த அணிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில், வேலுமணி - சண்முகம் டீம் வேறு திட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஒருகாலத்தில் தமிழக அரசியலை முழுமையாக கட்டுப்படுத்திய கட்சி, இந்த முறை மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

அதேநேரத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால் முழுமையான பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு அவசியமான சூழல் உருவானது.
அதிமுக பிளவு
இந்த சூழலில்தான் அதிமுகவுக்குள்ளேயே பெரிய பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையுடன் கருத்து வேறுபாட்டில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் ஒன்று திரண்டு, சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்த ஒரு முடிவு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து கிடப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
விஜய் அமைச்சரவை
அப்போது அரசியல் வட்டாரங்களில் ஒரு முக்கிய பேச்சு ஓடியது. "தவெக அரசை காப்பாற்றியதற்கான பரிசாக, அதிமுக அதிருப்தி அணிக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் கிடைக்கும்" என்பதுதான் அந்த தகவல். குறிப்பாக, 25 எம்.எல்.ஏக்களுக்கு குறைந்தபட்சம் 4 அல்லது 5 அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று சி.வி.சண்முகம் தரப்பு நம்பிக்கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல கட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் கடைசி நேரத்தில் நிலைமை முழுவதும் மாறிவிட்டது.
அமைச்சரவை விரிவாக்கம்
அமைச்சரவை விரிவாக்கத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மட்டுமே இடம் வழங்கப்பட்டது. அதிமுகவிலிருந்து ஆதரவு அளித்த ஒருவரின் பெயர்கூட பட்டியலில் இடம்பெறவில்லை. இதுதான் தற்போது அந்த அணியில் பெரிய அதிருப்தியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, "அமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை.. வாரிய தலைவர் பதவியும் இல்லை.. இப்போது நாங்கள் அரசியல் ரீதியாக நடுவில் சிக்கியுள்ளோம்" என்று சில எம்.எல்.ஏக்கள் வருத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எடப்பாடி பழனிசாமி
தேர்தலில் போட்டியிட பல கோடி ரூபாய் செலவு செய்தோம்.. அதற்காக கடனும் வாங்கியுள்ளோம்.. இப்போது அதிகாரமும் இல்லை.. எதிர்காலமும் தெளிவாக தெரியவில்லை என்ற கவலையும் அந்த அணியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. "எடப்பாடி பழனிசாமி அணியிலேயே இருந்திருந்தால் குறைந்தபட்சம் கட்சி பதவியாவது தப்பித்திருக்கும்" என்ற மனநிலையும் சிலரிடம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், உடனடியாக இபிஎஸ் அணிக்கு திரும்பும் எண்ணம் அனைவரிடமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
அதிமுக அதிருப்தி அணி
சில முன்னாள் அமைச்சர்கள், "இனி தனி அணியாகவே செயல்படலாம்.. மீண்டும் பழனிசாமி பின்னால் சென்று ஏமாற வேண்டாம்.. தவெக கூட்டணி நீண்ட நாள் நீடிக்காது.. ஒரு கட்டத்தில் அந்த கூட்டணி உடையும்.. அப்போது நமக்கு அரசியல் வாய்ப்பு வரும்" என்று தங்கள் ஆதரவாளர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது அந்த அணிக்குள் இரண்டு விதமான கருத்துகள் நிலவுவதாக கூறப்படுகிறது.
பொதுக்குழு
ஒரு தரப்பு மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைய வேண்டும் என்று நினைக்கிறது. இன்னொரு தரப்பு தனி அரசியல் பாதையை தேர்வு செய்யலாம் என்ற யோசனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் நிலைமை நாளுக்கு நாள் சிக்கலாகி வருகிறது. ஏற்கனவே பொதுக்குழு ஆதரவை திரட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் சில எம்.எல்.ஏக்கள் அமைதியாக இபிஎஸ் அணியுடன் மீண்டும் தொடர்பு கொண்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி
இந்த சூழலில் மேலும் சிலர் விலகினால், சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி அணிக்கு சட்டப்பேரவையில் தனி குழுவாக செயல்பட முடியாத நிலை உருவாகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அடுத்த சில நாட்கள் அதிமுக அரசியலில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒருபுறம் அமைச்சரவை ஏமாற்றம்.. இன்னொரு பக்கம் தகுதி நீக்க அச்சம்.. மறுபுறம் எதிர்கால அரசியல் குழப்பம்.. இந்த மூன்று பிரச்சனைகளுக்கும் நடுவில் தற்போது அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிக்கித் தவித்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications